Friday, December 16, 2011

பகைமை போற்றுவோம்


பகைமையை போற்றுவோம்
பகைவனை வளர்ப்போம்
தீதும் நன்றே
நன்றே தீதும்

வெற்றியின் இன்பம்
பகைமையில் சிறக்கும்
உழைப்பின் மேன்மை
துரோகியால் ஓங்கும்

என்னில் கொஞ்சமும்
எதிரியில் மிஞ்சியும்
இருக்கும் அசிங்கமே
உண்மையின் பூரணம்
அரக்கனும் கடவுளும்
சேர்ந்ததே புராணம்

அன்பு பலவீனம்
அக்கறை மரணம்
துரோகம் உத்வேகம்
எதிரிதான் வீரியம்

பராசக்தியே!
எதிரிகள் நிறையவே
அனுப்பி வை
துரோகிகள் இன்னும்
அதிகம் செய்
இவர்களை எரித்த
சாம்பலை பூசி
காலனாய் அதிர
சக்தியைக் கொடு
நெற்றியில் இன்னும் ஒரு
கண்ணையும் கொடு

Thursday, December 8, 2011

அடியால் உலகளந்தவன்


என் வழியில் 
நான் விட்டு செல்லும் 
பாத சுவடுகள்
என்னையும் விட
பெரிதாகி வருகிறது

அதே வேளையில்
நான் கொஞ்சம் கொஞ்சமாய்
சிறுத்து வருகிறேன்

முழுவதும் தீர்ந்துப்போகுமுன்
எது எல்லை என்று
தீர்மானித்துவிட நடக்கிறேன்
முன்னமே தீர்மானிப்பதற்காய்
நின்றுவிடுவேனெனில் 
என் சுவடே என்னை 
விழுங்கி விடுமோ
என்ற அச்சம் வேறு

ஒரு சமயம்,
நான் எறும்பினும் சிறிதாகி 
பின்பு இல்லாமலேயே போனேன்
ஆனால் என் சுவடோ
பிரமாண்டமாய் பெருத்து
உலகையே மறைத்திருந்தது
கொஞ்சம் அழித்தும் இருந்தது.

அடியால் உலகளந்தவன்
என்று மட்டுமே
இன்று நான் 
அறியப்படுகிறேன்

Friday, November 4, 2011

யாதும் இசையே யாவரும் கேளீர்

எல்லா இசையையும் நம்மால் ரசிக்க முடியுமா? எனக்கு தெரிந்து கண்டிப்பாக முடியும். எல்லா இசையிலும் ஜீவன் இருக்கிறது. ஆனால் ஏன் நம்மால் சில இசையைச் சுத்தமாக ரசிக்க முடியவில்லை. 

ஏ ஆர் ரஹ்மானின் ROCKSTAR என்ற இந்தி திரைப்பட இசை என்னை பெரிதும் கவர்ந்திருக்கிறது. Sadda Haq என்றப் பாடல் நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் அனுபவிக்கும் இசை. ஆனால் அவரது yahoo group இல் அவருடைய ரசிகர்களே இரு பிரிவுகளாகி, ஒரு பிரிவு அந்த இசையைப் போற்றியும் இன்னொரு பிரிவு அதை மட்டம் தட்டியும் திட்டியும் எழுதுகிறார்கள். அது இப்பொழுது முற்றி பெரிய எழுத்து சண்டையாக வளர்ந்து வருகிறது. அது எனக்கு விநோதமானதாக இருந்தது. ஏன் நம் மனம் ரசனையில் வேறுபடுகிறது? கண்டிப்பாக வேறுப்பட்டுதான் இருக்கும் என்பது நிதர்சனமானாலும் எதனால் வேறுபடுகிறது என்பதை பல சமயம் நாம் ஆழ்ந்து நோக்கியதில்லை. 

வர்ணங்களில் சிலது மட்டுமே நமக்கு பிடிக்கிறது, சிலது கிடையாது. மனோவியல் நிபுணர்கள் சிலர் அது முற்றிலும் நமது மனோவியலோடு தொடர்புடையது என்று காரணம் சொல்கிறார்கள். அதுபோல்தான் இசை ரசனையும் இருக்க முடியும். வேறு சில நிபுணர்கள், அதிகமான நல்ல நினைவுகளும் நல்ல சம்பவங்களும் ஒரு சில வர்ணங்களின் அடிப்படையில் நமக்கு கிடைத்திருக்குமானால் கால போக்கில் அந்த வர்ணம் நமக்கு நேர்மறை எண்ணங்களையும் அந்த வர்ணத்தின் மீது நமது விருப்பத்தையும் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். இதுவும் இசைக்குப் பொருந்தும். 

நான் சபா பல்கலைக்கழகத்தில் படித்த போது எனது பக்கத்து அறையில் ஒரு மலாய் நண்பன் இருந்தான். அவன் எலக்டோரினிக் இன்ஞீனியர் மாணவன். அவன் எப்பொழுதும் Heavy Metal இசையைதான் கேட்பான். அதுவும் அதிக சத்தமாக. ஹெவி மெட்டல் இசையின் முக்கிய அம்சமே அதிக இரைச்சல். இசையை, அதிலும் கிதாரை டியூன் பண்ணி ஒருவகை இரைச்சலாக பண்ணுவது. தமிழில் சரியாக விளக்குகிறேனா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் இதை distortion என்று சொல்லுவார்கள். இளையராஜாவின் இசையில் கலைஞன் படத்தில் வரும் கலைஞன் கட்டுக்காவல் விட்டோடும் காற்றைப்போல் என்றப் பாடல் ஒரு அற்புதமான முதல் தமிழ் ஹெவி மெட்டலாக ஆகியிருக்க வேண்டியது. ஆனால் அப்படியாகவில்லை. அதற்கு முதல் காரணம் எஸ்.பி. பாலா அதை பாடியிருப்பது. இன்னொன்று, இந்த distortion அம்சம் அதில் இல்லாமல் போனது. இளைராஜா அதை ஹெவி மெட்டலாக உருவாக்க விரும்பாமல் இருந்திருக்கலாம். சிங்காரவேலனில் வரும் போட்டு வைத்த காதல் திட்டம் இன்னொரு அற்புதமான ஹெவி மெட்டல் முயற்சி. ஆனால் அசல் ஹெவி மெட்டல் கிடையாது. இந்தியர்களால் நிச்சயமாக ஹெவி மெட்டல் இசையை கொண்டுவர முடியாது, ரசிக்கவும் முடியாது என்றுதான் நினைக்கிறேன். காரணம் காலகாலமாக நாம் நம்பி திரட்டி வந்த கலாச்சாரம் அப்படி. ஆனால் சடா ஹக் என்ற இந்தப்பாடலை ரஹ்மான் செய்திருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. எளிமையான, ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ள ரஹ்மானால் இது முடிந்திருக்கிறது என்பதுதான் என்னை ஆச்சரியப்படவைக்கிறது. இது இந்திய இசையில் இன்னொரு அலையை ஒரு வேளை உண்டாக்கக் கூடும். 

சரி, மீண்டும் அந்த நண்பரிடமே வருவோம். அவன் எனக்கு கொஞ்சம் நெருக்கம் என்பதால் அவனுடைய அறைக்கு அவ்வப்போது செல்வதுண்டு. அப்பொழுதெல்லாம் இந்த இசையை கேட்க நேர்ந்தால் நான் மிகவும் அசெளகரியத்திற்கு ஆளாவேன். அந்த இசை மட்டுமல்ல அவன் அறையும்தான். இருண்ட அறை, மண்டை ஓடுகளின் விதவிதமான ஓவியங்கள் சுவர் முழுவதும் இருக்கும். அவனிடம் ஒரு முறை 'உனக்கு ஏன் இந்த இசை பிடிக்கிறது? என்னால் கேட்க முடியவில்லை' என்று சொன்னேன். அவன் 'இந்த இசையைக் கேட்கும் போது எனது மன அலுத்தம் முற்றிலுமாக வெளியேறிவிடுகிறது' என்றான். எனது மிகபெரிய விரக்தியும் கோபமும் இந்த இசையோடு சேர்ந்து நானும் கத்துவதன் மூலம் வெளியேறிவிடுகிறது என்றான். அதை யோசித்தவாரே 'ஏன் மண்டை ஓடுகளின் படம் உன் அறை முழுவதும்' என்றேன். அதற்கு அவன் 'ஹெவி மெட்டல் இசை கலைஞர்கள் பெறும்பாலும் சாத்தானை வழிபடுபவர்கள், அவர்களுடைய உடை, சீடி கவர் என்று எல்லாவற்றிலும் கொஞ்சமாவது அந்த அம்சம் கண்டிப்பாக இருக்கும்' என்றான். அவர்களுடைய போஸ்டர்களையும் படங்களையும் காட்டினான், இமைகளுக்கு கறுப்பு மையிட்டிருந்தார்கள், தலை முடி அதிகமாகவும் நீளமாகவும் வளர்ந்து, வாராமல் அகோரமாய் இருந்தது. அவன் அவர்களுடைய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல நான் ஒரு பாதாள உலகத்திற்கே சென்றுக்கொண்டிருந்தேன். அதன் உச்சமாக ஒன்று சொன்னான், நான் அதிர்ந்தே போய்விட்டேன். அவன் ஒரு ஹெவி மெட்டல் குழுவின் தீவிர ரசிகன். அந்தக் குழுவின் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை. ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அவர்களும் ஹெவி மெட்டல் இசை உலகின் உச்சத்தில் இருந்தவர்கள். அவன் சொன்னான் அவர்களுடைய மேடை நிகழ்ச்சிகளின் உச்சமாக பன்றிகளை மேடையேற்றி அதனுடன் உறவு கொள்வார்கள். (மன்னிக்கவும் A அல்லது 18 என்ற சென்ஸர் எச்சரிக்கையை போட மறந்ததற்கு.) எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வெளியேறினேன். அதுதான் நான் அவன் அறைக்கு சென்ற கடைசி நாள். இந்த இசையை பற்றி நான் குறிப்பிட்டிருப்பது உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். மனவலிமை உள்ளவர்கள் இந்த இடுக்கைகளை படித்துப் பார்க்கலாம். 

http://en.wikipedia.org/wiki/Heavy_metal_music

http://uncyclopedia.wikia.com/wiki/Metalheads

http://en.wikipedia.org/wiki/Mayhem_(band) 

ஆனால், என்னால் இப்பொழது LINKIN PARK மற்றும் INCUBAS இசைகளையும் அனுபவிக்க முடிகிறது. எனது நம்பிக்கைகளிலும், மனோநிலையிலும், ஒழுக்கத்திலும் எந்த ஒரு மாறுதலும் இல்லாமல் என்னால் அவர்கள் இசையை உள்வாங்க முடிகிறது. அவர்கள் 100% ஹெவி மெட்டல் இசை கலைஞர்கள் இல்லையென்றாலும் அவர்கள் இசையிலும் இந்த distortion அம்சமும், கொச்சை வார்த்தைகளும் அதிகமாக இருக்கும். விரக்தி ஏற்படும் போது இந்த இசை என்னை உச்சாகப்படுத்துவது போல் உணர்வதுண்டு. 

அதனால் எல்லோராலும் எல்லா இசையையும் ரசிக்க முடியும் என்றுதான் நினைக்கிறேன். இருந்தாலும் ஆரம்பத்தில் சொன்னதுபோல் இசை ரசனை முழுக்க முழுக்க நமது மனோவியலின் அடிப்படையில் அமைந்ததுதான். ஒருவேளை ஏ .ஆர். ரஹ்மானின் சில ரசிகர்களுக்கு சடா ஹக் இசை பிடிக்காமல் போனதற்கு காரணம் அதில் இருக்கும் ராக் அம்சமாக இருக்கலாம். இந்தியர்களுக்கு ராக் எப்பொழுதும் கொஞ்சம் அன்னியம்தான். 

இசை வெறும் சப்தங்களை மட்டும் கொண்டு வருவது இல்லை என்பது இதன் வழி தெரிகிறது. அது காலகாலமாக திரட்டி வந்த நம்பிக்கைகளையும் நினைவுகளையும், விளக்க முடியாத, வார்த்தைகள் அற்ற மொழிகளின் வழி நமக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. நமது நம்பிக்கையும் அனுபவங்களும் ஏதோ ஒரு புள்ளியில் அந்த இசையின் சில குறிப்பிட்ட அம்சத்துடன் இணையும் போது, நமக்கு அந்த இசை அற்புதமானதாகவும், கடவுளின் மொழியாகவும் தரிசனம் தருகிறது. அதனால் பல சமயங்களில் ஒரு குறிப்பட்ட இசையைத் தவிர வேறு இசைகளுக்கு நமது மனம் நம்மை மேலும் ஆழமாக செல்லவிடாமல் தடுத்துவிடுகிறது. 

(இளையராஜாவின் இசை இன்னமும் கிராமங்களின் சுவாசமாகவும், இன்னமும் புதிய திரைப்படங்களின் பின்னனி இசையின் சாரமாகவும் இருப்பதற்கு இது முக்கியமான காரணம்.) 

இரண்டாவதாக நிபுணர்கள் குறிப்பிட்டிருப்பது, நமக்கு நேரும் அனுபவம் சார்ந்துதான், ஒன்றின் மீது நமது விருப்பும் வெறுப்பும் அமைகிறது என்று. மனுஷ்ய புத்திரனை ஒவ்வொரு முறையும் நான் சந்திக்கும் போது எங்கள் பேச்சு இசை சார்ந்துப்போகும், அவர் சொல்வார், "இளையராஜாவின் இசையை கேட்கும் போது, நம்முடைய கடந்த காலத்தின் எத்தனை நினைவுகளை அது கூட்டி வருகிறது தெரியுமா? ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு அனுபவம். அவர் இசையைக் கேட்டு ஒரு தலைமுறையே வளர்ந்திருக்கிறது" என்பார். அது உண்மைதான். அந்த தலைமுறை தப்பித்தவரிக்கூட வேறு பாடல்களை கேட்டுவிட முடியாதபடி ஒரு இசை சர்வாதிகாரம் செய்திருக்கிறார், அந்தக் காலகட்டத்தில். அவர் இசையுடன் நமது அன்றாட வாழ்வின் இனிப்பு கசப்புகளை திரட்டி, நமது ஒவ்வொரு பருவத்தையும் கடந்து வந்திருக்கிறோம். ஒருவேளை இப்பொழுதுபோல் அன்றும் பல இசையமைப்பாளர்கள் இருந்திருந்தால், இளையராஜாவின் இந்த இசை அதிசயம் நிகழ்ந்திருக்காமல் போயிருக்கலாம். இன்னும் 10 ஆண்டுகளுக்கும் அல்லது அதற்கும் மேலும் இளையராஜாவின் இந்த இசை மேஜிக் நிலைக்குமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். காரணம் இன்று நமது காதல் தோல்வியில் யுவன் அழுகிறார், நமது வெற்றியை ரஹ்மான் கொண்டாடுகிறார், நமது கொண்டாடத்தில் விஜய் ஆண்டனி ஆடுகிறார். அதனால் அடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடிய இன்றைய தலைமுறை இசை எதுவாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், தமிழ் மண் அதன் வாசனையை இழக்கும் வரை இளையராஜாவின் இசை இருக்கும் என்றுதான் தோன்றுகிறது அல்லது தமிழ் மண் ஒருவேளை அதன் வாசனையை இழக்கும் போது, இளையராஜாவின் இசையால் மீண்டும் தன்னை கண்டடையலாம். 

மற்றொன்று, ஒரு இசையில் நமது விருப்பு வெறுப்பை முடிவு செய்வது frequency (ஒலி அலை). ஒவ்வொரு சுரத்திற்கும் ஒரு அலை உண்டு, ஒவ்வொரு இசைக்கருவிக்கும் சிறந்த ஒரு ஒலி அலை இருக்கும். அதுதான் அந்த இசைக்கருவியின் ஜீவனாக இருக்கும். மிக்ஸிங்கில் (mixing) முக்கிய அம்சமே இந்த ஒலி அலையை மாற்றி எந்த அலையில் ஒரு குறிப்பிட்ட இசை கருவி அல்லது ஓசை அலாதியாக ஒலிக்கிறது என்று கண்டடைந்து அதை இன்னும் மெருகேற்றுவது. மிக்ஸிங்கில் ஒரு பாடலின் மொத்த உணர்வையுமே மாற்றிவிட முடியும். யுவனும் கார்த்திக்கும் பல பேட்டிகளில், அவர்களுடைய இசையில் சில ஒலி அலைகளை (frequency) முற்றிலும் தவிர்த்துவிடும் படி இளையராஜா கூறியதாகச் சொல்லியதுண்டு. (அது எந்த ஒலி அதிர்வு என்பது எனக்கு தெரியாது.) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆடியோ ஒலி அதிர்வு என்பது 20 Hz - 20,000 Hz ஆகும். எல்லா ஒலி பெருக்கிகளும் அல்லது ஹெட் போன்களும் (head phone), இந்த ஒலி அலைகளை, அவர்களின் வெளியீடுகளில் முழுதும் உள்ளடக்குவது இல்லை. சில ஹெட் போன்கள் மிக குறைவான அலையாக 5Hz கொண்டுள்ளது. இது மிகவும் அபூர்வம். சில ஹெட் போன்கள் உயர் அலைகளை 15,000 Hz அளவோடு நிறுத்திகொள்வதும் உண்டு. 

ஒரு இசையை வெவ்வேறு ஒலிப்பெருக்கிகளிலும், சூழலிலும், ஹெட் போன்களிலும் மாற்றி மாற்றி கேட்கும் போது, வெவ்வேறு விதமான அனுபவங்களை நம்மால் உணர முடியும். மிக சிறந்த பாடல்கள் பல சமயங்களில் மலிந்த ஒலிப்பெருக்கிகளில் கேட்கப்பட்டு, நம்மால் உதாசிணப்படுத்தப்பட்டிருக்கும். ஏ ஆர் ரஹ்மானின் எல்லா இசையிலும் இந்த வித்தியாசத்தை நம்மால் துள்ளியமாக உணர முடியும். ஒவ்வொரு ஒலி பெருக்கியும், சாதனமும் (player) ரஹ்மானின் இசையை வெவ்வேறு விதமாக நாம் உணர வகை செய்யும். காரில் கேட்பது ஒரு அனுபவம் என்றால், Hi Fiயில் கேட்பது மற்றொரு அனுபவம். அதையே ஹெட் போனில் கேட்டால் முற்றிலும் வேறு அனுபவம். ஒலி அதிர்வுகளை பற்றி மேலும் தெர்ந்துக்கொள்ள இந்த அகப்பக்கதை பாருங்கள்.http://en.wikipedia.org/wiki/Audio_frequency

இதில் இன்னொரு சுவரசியமான விஷயம் என்னவென்றால் 19Hz கீழான அலைகள் சில சமயம் எதோ ஒரு வெள்ளை உருவத்தை நாம் பார்த்தது போல் ஒரு பிரம்மையை உண்டாக்குவது உண்டு என்று விக் தெண்டி (Vic Tandy) என்ற ஆய்வாளர் கூறியிருக்கிறார். சிலர் பேயையோ ஆவியையோ பார்த்ததாக கூறக் காரணம் இந்த குறைந்த ஒலி அலையினால்தான் என்கிறார். நில அதிர்வுகள், பூமிக்கடியில் இருக்கும் பெட்ரோலியம் மற்றும் இருதய ஆய்வுகள் எல்லாம் 20Hz - 0.001Hz இடைப்பட்ட ஒலி அதிர்வுகளின் வழிதான் ஆராயப்படுகிறது. சில விஞ்ஞானிகள் தூரத்தில் ஒருக்கும் யானைகளுடன் 15hz - 35Hz இடைப்பட்ட ஒலி அலைகளை பயன்படுத்தி தொடர்புக் கொண்டு நிரூபித்திருக்கிறார்கள். இந்த ஒலி அலைகள் நமக்கு பேயை பார்த்த அனுபவத்தையும், மிருகங்களுடன் தொடர்புக்கொள்ளும் வாய்ப்பையும் தருகிறதென்றால், வேறு என்னெவெல்லாம் ஒலியால் சாத்தியம் என்று நினைத்துப்பாருங்கள். சில ராகங்களின் வழி நோயை குணப்படுத்த முடியும் என்பதும், தாவரங்களை வளர்க்க முடியும் என்பதும் சாத்தியம்தான் என்று ஒலி அலைகளை பற்றி படித்துவுடன் நம்ப தொடங்கியிருக்கிறேன். காரணம் ஒவ்வொரு சுரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஒலி அலை இருக்கிறதள்ளவா. திருமந்திரத்தில் கடவுள் நாதமாக இருக்கிறான் என்று சொல்லப்படுவதின் பின்னனியில் பல உண்மைகள் பொதிந்திருக்கிறது என்பதை இப்பொழுதுதான் உணர முடிகிறது. மேலும் தெரிந்த்துக்கொள்ள இந்த இடுக்கையைப் பார்க்கலாம்.http://en.wikipedia.org/wiki/Infrasound 

எல்லா இசையையும் இப்படி கடவுளுடனும், ஆன்மீகத்துடனும் இணைத்து பார்க்க முடியாது. நெகடிவ் உணர்வுகளை தரும் இசையும், ஒலி அலைகளும் நிச்சயம் உண்டு. ஹெவி மெட்டல் இசையின் தீவிர ரசிகர்கள் பெரும்பான்மையோர் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது. மேலே நான் குறிப்பிட்ட இடுக்கையில் அது உள்ளது என்று நினைக்கிறேன். ஜேசுதாஸும் ஒரு பேட்டியில் சில ராகங்களை பாடுவதால் நாம் இறந்துவிட முடியும் என்கிறார். தான் முயற்சித்ததாகவும் ஒரு கட்டத்தில் அந்த அனுபவங்கள் தந்த அச்சத்தால் அதை நிறுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார். 

ஆக, இந்த ஒலி அலைகள் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தையும் உணர்வு மாற்றத்தையும் கொண்டு வர வாய்ப்புள்ளபடியால், ஒரு சில இசை நமக்கு பிடிப்பதற்கும் ஒரு சில இசை நமக்கு பிடிக்காமல் போவதற்கும் இந்த ஒலி அலையும் ஒரு காரணம்தான் என்று நிச்சயமாக கூற முடியும். 

இதை எல்லாம் கடந்து வெவ்வேறு இசையை எப்படி கேட்டும் அனுபவித்தும் பழகுவது? புத்தகம் படிப்பது போல்தான். படிப்பதில் உங்களுக்கு அதிகமான தாகம் இருப்பின் எல்லா வாசிப்புகளும் உங்களுக்கு புது அனுபவமாகவும், கண்டடைதலாகவும் இருக்கும். அதுபோல்தான் இசையும். இசையை கேட்பதில் தாகம் இருக்கவேண்டும் என்பதைவிட அதை அனுபவிக்க உங்களுக்கு தாகம் இருக்க வேண்டும். ஆனால் இதில் சூழலும் சாதனமும் மிகவும் முக்கியமான அம்சம். எனக்கு பழக்கப்பட்டவைகளை மட்டும் இங்கே கூறுகிறேன். 

1. கர்நாடக இசையை ஒலி வட்டுகளில் கேட்பதைவிட கச்சேரிகளில் நேரிடையாக கேட்பது நல்ல அனுபவமாக இருக்கும். 

2. Western Classical இசையை இருண்ட அறையில் headphone இல் கேட்பது அல்லது ஒரு அகலமான அறையில் நல்ல ஒலிப்பெருக்கிகளில் கேட்பது மிகவும் அற்புதமாக இருக்கும். 

3. ராக் இசையை அல்லது பாப் இசையை காரில் பயணிக்கும் போது கேட்பது அல்லது ஹெட் போனில் கேட்பது சிறப்பாக இருக்கும். எனக்கு அதுதான் பிடித்திருக்கிறது. ஹெவி மெட்டல் ராக் இசையை கேட்கும் போது, சாதாரணமாக நாம் கேட்கும் ஒலி அளவைவிட 3 டிபி அல்லது 4 டிபியாக உயர்த்திவிடலாம். (3 db - 4 db) 

4. ஹிப் ஹப் இசையை உங்கள் அறையில் நல்ல Hi Fi சிஸ்டத்தில் கேட்டால்தான், அதுதரும் உச்சாகத்தை உள்வாங்க முடியும். 

5. New Age இசை வகைகளை ஹெட் போனில் கேட்டு அனுபவிப்பது சிறந்தது. 

எல்லா இசை வகைகளுக்கும் உங்கள் மனமும் காதும் பழக்கப்பட்டவுடன், நீங்கள் எதிலும் எந்த இசையையும் கேட்டு மகிழ பழகியிருப்பீர்கள். இசையை ஆழ்ந்து கேட்டு ரசிப்பது என்பது தியானம் போல். 

"இல்லை அகிலன். இசையை கேட்பதால் உங்கள் மூளை மழுங்கிவிடும். இசை நம்மை மிகப்பெரிய முட்டாளாக மட்டுமே ஆக்குமே தவிர அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை" என்று எனது காப்புரிமை வக்கீல் ஆனந்த் வெங்கடாசாரி கூறியது என் நினைவில் வந்து வந்து போவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. ஆக எல்லா இசையையும் கேட்டு பழக விருப்பமுள்ளவர்கள் மட்டும் இந்தக் கட்டுரையைப் படிக்கலாம். சாரி, இந்தவரியை நீங்கள் படிக்கும் போது இந்த கட்டுரையை முழுதுமாக படித்து முடித்திருப்பீர்கள். ஆக நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த கட்டுரையை படித்துவிட்டு எல்லா இசையையும் கேட்டு மகிழ விருப்பம் கொண்டு அதனால் சில அசம்பாவிதங்களை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

Sunday, July 17, 2011

agilans' photostream

photo.JPGphoto.JPGphoto.JPGphoto.JPGphoto.JPGphoto.JPG
photo.JPGphoto.JPGphoto.JPGphoto.JPGphoto.JPGphoto.JPG
photo.JPGphoto.JPGphoto.JPG2011-06-10 11.03.422011-06-10 11.03.332011-06-10 11.03.22
2011-06-10 11.02.57photo-6photophoto-9photo-12photo-11

My Views

Wednesday, December 1, 2010

The Beatles


தி பீட்டல்ஸ் (The Beatles), உலகத்திலேயே மிகவும் பிரபலமான இசை குழு என்று போற்றப்படுபவர்கள். இதில் மிகப்பெரிய ஆச்சரியம் ஏறக்குறைய 40 வருடங்களாக அதே புகழுடனும், விற்பனையிலும் முதல் நிலையில் இருக்கும் ஒரே இசை குழு என்றால் அது பீட்டல்ஸ் தான். எத்தனை புதிய இசை தொகுப்புகள் வந்தாலும் இந்த பழைமையை அழிக்க முடியாத அளவு உறுதியாக நிற்கும் இசை தொகுப்புகள் பீட்டல்ஸ் குழுவினுடையது. அந்த அளவு இன்னும் புதியதாகவே ரசிகர்களுக்கும், பாராபட்சமில்லாமல் எல்லா இசை கலைஞர்களுக்கும், இசைக் குழுக்களுக்கும், விமர்சகர்களுக்கும் இவர்களின் பாடல்கள் ஒலிப்பதால்தான்.

இத்தனைக்கும் 1963 இல் முதல் ஆல்பம் வெளியிடப்பட்டு 1970 அதிகாரப்பூர்வமாக அவர்களுடைய இசைக் குழுவை அவர்களே கலைத்தார்கள். 7 வருடங்கள்தான், மொத்தம் 12 ஆல்பங்கள் மட்டுமே, 200க்கும் குறைவான பாடல்கள் மட்டுமே. பிக்காசோவையும் அவருடைய ஓவியங்களையும் எப்படி விமர்சகர்கள் தவிர்க்க முடியாத கலை ஆளுமைகளாகப் பார்க்கிறார்களோ அதேபோல் பரப்பிசையில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் பீட்டல்ஸை அங்கீகரிக்கிறார்கள். அந்த அளவுக்கு அதுவரை எந்த இசை கலைஞர்களும் முயற்சிக்காத பல புதுமை உத்திகளை தங்களது ஒவ்வொரு பாடலிலும் வெளிப்படுத்தி அதில் வியாபார வெற்றியும் பெற்றதோடு, ஆரோக்கியமான இசை விமர்சனங்களையும் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு பின் வந்த எல்லா இசை கலைஞர்களும், இன்று பிரபலமாக இருக்கும் அனைவரும் ஒருமித்த குரலோடு ஆமோதிப்பது, பீட்டல்ஸ் பாதிப்பு இல்லாத எந்த இசையும் இல்லை என்பதுதான். அந்த அளவுக்கு தவிர்க்க முடியாத அடையாளங்களையும் ஆளுமைகளையும் இசை உலகில் விட்டு சென்றிருக்கிறார்கள். பரப்பிசைக்கு புதிய தளங்களை தந்திருக்கிறார்கள்.

இந்த வருடம் (2010), 16 நவம்பரில்தான், முதல் முறையாக டிஜிட்டல் மீடியங்களில் அவர்களுடைய இசை வெளியிடப்பட்டது. முக்கியமாக iTUNES-இல். பல்வேறு காரணங்களுக்காக இதுவரை அதிகாரத்துவ டிஜிட்டல் தளங்களில் அவைகள் வெளியிடப்படாமல் இருந்தது. இப்பொழுது iTUNESஇல் வெளியிடப்பட்டு, நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த திகதி வரை (24 நவம்பர்) மொத்தம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆல்பம் மட்டும் 4.5 லட்சம். அமெரிக்காவில் மட்டும் 1.19 லட்சம் ஆல்பங்கள். பதிவிறக்கம் செய்யப்பட்ட மொத்தப் பாடல்கள் 14 லட்சம். இத்தனைகயும் ஒரே வாரத்தில். இது பில்போர்ட் (BILLBOARD) ரிப்போர்ட். அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆல்பம் ABBEY ROAD. அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட பாடல் HERE COMES THE SUN.

இந்த பாடல் பீட்டல்ஸ் குழுவில் ஒருவரான George Harrison என்பவரால் Eric Clapton உடன் இணைந்து இயற்றப்பட்டது. பீட்டல்ஸின் இசை எனக்கு அறிமுகமானது George Harrison அவர்களின் இசை மூலமாகத்தான். அதுவும் ஏறக்குறைய 90களில். அப்பொழுது நான் ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் அதிக தீவிரம் காட்டி வந்தேன். அங்கு என்னை மிகவும் வசீகரித்தவற்றுள் மிகவும் முக்கியமானது George Harrison அவர்களின் கோவிந்தாம் ஆதி புருஷாம் என்ற பாடல். கோலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கெட்டாத அந்த உலகத்தின் வாசல்வரை நம்மை அழைத்துப் போகும் இசையமைப்பு. ஹரே கிருஷ்ணா இயக்கத்திற்கு ஓர் உலக இசை அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது இவரின் இசையமைப்புகள் என்று நிச்சயமாக சொல்லலாம். ஹரே கிருஷ்ணா மந்திரம் முதல் பல வைணவ வங்காள பாடல்கள் மேலை நாட்டு physchedelic இசை வடிவுடன் ஆங்கிலேயர்களை வசீகரித்தது. இவர் பண்டித் ரவிசங்கருடன் இணைந்து சில இசை தொகுப்புகளும் வெளியிட்டிருக்கிறார் குறிப்பாக Vedic Chanting. இவர் 2001 புற்று நோயால் இறந்து விட்டார்.

ஆனால் பீட்டல்ஸ் குழுவின் பாடல்களின் பிரபலத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள் John Lennon மற்றும் Paul McCartney. John Lennon 1980இல் சுட்டுக் கொல்லப்பட்டார். காரணங்கள் இன்றும் மர்மமாகவே உள்ளது. பீட்டல்ஸ் குழுவினரில் இன்றுவரை உயிரோடு இருப்பவர்கள் Paul McCartney யும், Ringo Starr என்பவரும் தான். இன்றும் அவர்கள் தனி ஆல்பங்கள் வெளியிட்டு வருகிறார்கள். பீட்டல்ஸ் குழுவின் ஏறக்குறைய 75% பாடல்கள் ஜோன் லென்னனாலும் (John Lennon) பௌல் மெக்ர்த்னியாலும் (Paul McCartney) இயற்றப்பட்டது அல்லது கம்போஸ் செய்யப்பட்டது. அவற்றில் எல்லாமே பிரபலமான பாடல்கள். இவர்கள் இருவரும் சிறந்த இசை மேதமைகளுடனும் வித்தியாசமான பரிச்சார்த்த இசை முயற்சிகளை ஒவ்வொரு பாடலிலும் வெளிகொணரும் தீவிரத்துடன் இருந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே பல இசைக் கலைஞர்களும் செய்வதுபோல் இவர்கள் ராக் அல்லது பாப் என்று ஒரே வித இசைப் பிரிவுகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் பல்வேறு இசைப் பிரிவுகளை தங்கள் வெளியீடுகளில் முயற்சித்திருக்கிறார்கள்.

இவர்களின் புகழுக்கும் பாடல்களின் பிரபலத்திற்கும் இன்னொரு முக்கியமான காரணம், பீட்டல்ஸின் இசைத் தொகுப்புகளின் தயாரிப்பாளர் George Martin. நான் முன்பு ஒரு கட்டுரையில் கூறியது போல், இசைத் துறையில் தயாரிப்பாளர் என்பது பணம் போடுபவர்கள் அல்ல, பாடலை எப்படி வடிவமைப்பது, எப்படி பாடுவது, எப்படி இசையை படைப்பது, எப்படி பதிவு செய்வது என்று முழுவதையும் முடிவு செய்யும் ஒரு கேப்டனை போன்றவர். பீட்டல்ஸின் இசை மெட்டுகளை, அதீத இசை கற்பனையை எப்படி ஒருங்கிணைத்து, பல்வேறு இசைப் பிரிவுகளின் பரீட்சார்த்த இசை முயற்சிகளை எப்படி ஒரு மெருகேறிய இசைத் தளத்திற்குள் கொண்டு வருவது, இசை ரசிகர்களின் ரசனையை எப்படி எதிர்கொள்வது போன்ற எல்லாவித கூறுகளையும் ஒருங்கிணைத்து, இது நிச்சயம் வெற்றிப் பெறும் என்று ஒரு முழுமைப் பெற்ற இறுதி வடிவை அவர்களின் பாடல்களுக்கு கொடுத்தவர் மார்த்தின் தான்.

இவர்களுடைய இசையின் புகழுக்கு அன்றைய சமூகத்தின் சிந்தனை மாற்றம் (அன்றைய ஐரோப்பிய, அமெரிக்க மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் பதின்ம வயதினர்), உலக பொருளாதரம், தொழில் மைய வளர்ச்சியும் அது சார்ந்த அடக்கு முறையும், கபிட்டலிச வெறுப்பு என்று பல ஆய்வுக் காரணங்களை முன் வைத்தாலும், ஒரு இசை விற்பதற்கும் புகழடைவதற்கும் அதன் இனிமை மட்டும்தான் காரணமாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். மனதை கவராதா எந்தப் பாடலும் விற்காது. சுருங்கச் சொல்வதென்றால் பீட்டல்ஸின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாகவும் வித்தியாசமாகவும் இருந்ததுதான். ஒரு இசையின் அல்லது பாடலின் வெற்றியைக் கொண்டுதான் அதன் பின்னனியில் இருக்கும் காரணங்கள் என்று நமது அறிவை கசக்கி சில சமூக மற்றும் கலாச்சார காரணங்களை நாம் கண்டெடுக்கிறோம். ஆனால் இசை எப்பொழுதும் அப்படி பிறப்பதே இல்லை. அதன் காரணத்தை அல்லது தொடக்கத்தை அல்லது அதன் உருவாக்கத்தை எந்தப் படைப்பாளியாலும் விளக்க முடிவதே இல்லை. இல்லையென்றால் நான் முன்பு சொன்ன, கலையின் பிரபலத்திற்கு காரணமான அந்த சமூக மற்றும் கலாச்சார காரணங்களையோ அல்லது இதர பிற காரணங்களையோ ஆய்வு செய்து அதன் தொடர்ச்சியாக ஒரு அற்புத இசையைப் படைக்க முடியுமே? ஆய்வு மனம் படைப்பதில்லை. படைப்பு மனதிற்கு ஆய்வு தேவையே இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான், அது தவறாகக் கூட இருக்கலாம்.

இசை ரசனை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறிவந்திருக்கிறது. அல்லது ஒரு சில இசை மேதைகளின் வித்தியாசமான முயற்சிகளால் மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமா இசையை எடுத்துக்கொண்டால், எம்.எஸ்.விக்கு பிறகு, இளையராஜா ஒரு புதிய இசை ரசனையை ஏற்படுத்தினார். அதன் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் வேறு புதிய இசை ரசனையை உண்டு பண்ணினார். அது போல் மேலை நாட்டில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எல்வீஸ் ப்ரெஸ்லியால் (Elvis Presley) இசை ரசனை பெரிதும் மாறுபட்டு ராக் அண்ட் ரோல் இசை பிரபலமடைந்திருந்தது. அதன் பிறகு அந்த அலையை மாற்றியவர்கள் என்றால் அது பீட்டல்ஸ் தான். அதுவும் அதுவரை அமெரிக்கர்களால் பிரபலமடைந்து வந்த பரப்பிசை முதல் முறையாக ஐரோப்பியர்களான பீட்டல்ஸிடம் சரணடைந்தது.

Rolling Stone என்ற இசை மாத இதழ் 2003 இல் செய்த ஆய்வில் உலகின் சிறந்த 500 இசை ஆல்பங்களில் முதல் இடத்தில் இருப்பது பீட்டல்ஸின் Sgt. Pepper's Lonely Hearts Club Band என்ற ஆல்பம் என்றது. அது மட்டுமின்றி பீட்டல்ஸின் இதர ஆல்பங்கள் அதே 500 சிறந்த இசை ஆல்பங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திலும், ஐந்தாவது இடத்திலும், பத்தாவது இடத்திலும், பதினாங்காவது இடத்திலும் என்று நீண்டுக் கொண்டே போகிறது. இத்தனைக்கும் பீட்டல்ஸ் குழு கலைக்கப்பட்டு 30 வருடங்கள் ஆகியும். அதேபோல் 2008ல் பில்போர்ட் (Billboard) என்ற இசை மாத இதழ் வெளியிட்ட சிறந்த 100 இசை கலைஞர்கள் பட்டியலில் இவர்கள்தான் முதலிடம். இந்தப் பட்டியல் அதிகம் விற்பனையான இசை தொகுப்புகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. Times இதழின் 20ஆம் நூற்றாண்டின் 100 முக்கியமான ஆளுமைகள் (The 20th Century's 100 Most Influential People) என்ற பட்டியலில் பீட்டல்ஸையும் குறிப்பிட்டிருந்தது. அமெரிக்க இசை நிறுவனங்களின் சங்கமான RIAA, பீட்டல்ஸின் இசை தொகுப்புகள்தான் அமெரிக்காவிலேயே அதிகம் விற்பனையான இசை தொகுப்புகள், வேறு யாருடையதுமல்ல என்று சான்றிதழ் வழங்கியிருக்கிறது. ஏன், ஏசு நாதரை விட பீட்டல்ஸ் பிரபலமானவர்கள் என்ற ஆய்வுகள் கூட நடந்திருக்கிறது.

ஆனால் பிற மேலைநாட்டு கலைஞர்கள் போல் இவர்களும் போதை மருந்துகளுக்கு அடிமையாகியிருந்திருக்கிறார்கள். ஒழுக்கம் கொண்டாடப்பட்டதில்லை. ஆனால் இதைப் பற்றியெல்லாம் விவாதிக்க எனக்கு இன்னும் ஞானம் போதவில்லை. காரணம் இன்னும் ஏனோ என் மனம் இசையும் இசை படைப்புத் திறனும் கடவுளால் அளிக்கப்படும் வரம் என்றே நம்பி வருகிறது. அதிலிருந்து எப்பொழுது எப்படி வெளியாகப்போகிறேன் என்று தெரியவில்லை.

மேலை நாட்டு படைப்பாளிகள் பெரும்பாலோர் இப்படி போதைக்கு அடிமையாவதும், தற்கொலை செய்துக் கொள்வதும், அதற்கு காரணமான படைப்பு மனத்தின் செயல்பாடு பற்றியும் மனோவியல் விஷயங்கள் பற்றியும் எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு நல்ல கட்டுரை எழுதியுள்ளார். எங்கு படித்தேன் என்பது சரியாக இப்பொழுது நினைவுக்கு வரவில்லை. அதில் ஒரு முக்கியமான விசயத்தை அவர் குறிப்பிட்டிருந்தார். நமது இந்தியப் படைப்பாளிகள் பலரும் மேலைநாட்டவர்கள் போல் ஒழுக்கம் தவறுவதும் தற்கொலை செய்துக்கொள்வதும் இல்லை. ஆனால் அதேசமயம் அவர்களும் அதே மன சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். ஆனால் இவர்கள் ஆன்மிகத்தில் மோகம் கொள்வதால் அந்த எதிர்மறை சிந்தனைகளை எதிர்கொள்கிறார்கள் என்று நம்பகத் தன்மையுடன் எழுதியிருந்தார்.

ஜெயமோகனின் கட்டுரையில் அவர் பாரதியையும் பாரதியின் ஆன்மீக நாட்டத்தையும் உதாரணமாக கூறியிருந்தார். இளையராஜாவையும் ஏ.ஆர். ரஹ்மானையும் அவர்களுடைய ஆன்மீகத் தேடலையும், ஒழுக்கத்தின் மீதிருக்கும் நம்பிக்கையையும் பார்க்கும்போது, ஜெயமோகனின் படைப்பு மனத்தின் செயல்பாடு பற்றிய அந்தக் பதிவை ஒரு சிறந்தக் கட்டுரை என்றே நினைக்கிறேன். ஜோர்ஜ் ஹரிசன் (George Harrison) போதை மருந்துகளில் இருந்து வெளிவர ஆன்மீகம் நிச்சயம் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் அவருடைய ஈடுபாடு தீவிரமடைந்திருக்கலாம் என்பது இந்த இடத்தில் சிந்திக்க வேண்டிய ஒன்று. பீட்டல்ஸின் மிகப் புகழ்பெற்றப் பாடலான HERE COMES THE SUN என்றப் பாடலை ஜோர்ஜ் ஹரிசன், ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் ஸ்தாபகர் ஸ்ரீல பிரபுபாதா அவர்களை மனதில் வைத்துதான் எழுதியதாக சிலர் கூறுவதும் உண்டு.

பீட்டல்ஸின் பாடல்கள் இன்னுமும் பிரபலமாக இருப்பதற்கு பாடல்களின் இனிமை புதுமை என்பது மட்டுமல்லாமல் வேறு ஒரு காரணமும் இருப்பதாக எல்லா இசைபதிவு நிபுணர்கள் ஒத்துக்கொள்வதும் உண்டு. அது, இசைப் பதிவில் இருக்கும் அசல் இசை சப்தமும், நாதமும் என்பது. பல நிபுணர்கள் அதிலும் மாஸ்தரிங் செய்பவர்கள் பலரும் சொல்வது, ஒரு பாடல் பல வருடங்கள் தாண்டியும் நமக்கு புதிதாகத் தெரிய மற்றொரு காரணம் இசையும் அதன் ஒலியும் எத்தனை அசலாக கலப்படம் இல்லாமல் இருக்கிறது என்பதை பொருத்துதான் என்பது. இன்று பலரும் தொழில் நுட்பம் என்ற பெயரில் ஒரு இசைக் கருவியின் ஓசை, புதுமையாக ஒலிக்க வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாமோ மாற்றுகிறார்கள். குறிப்பாக அதன் ஒலி அதிர்வுகளை வடிவமைப்பு என்றப் பெயரில் பலவாறு மாற்றுவது உண்டு. அது கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும் ஆனால் இசையின் அல்லது குறிப்பிட்ட இசைக் கருவியின் ஆயுளை குறைப்பதோடு ஆன்மாவையும் கொன்றுவிடும்.

இளையராஜா பல முறை இந்த ஒலி அதிர்வு பற்றிய விசயத்தை பேசியிருக்கிறார். நமக்கு ஒரு வயலின் அல்லது புல்லாங்குழலின் இசை, இசையாக மட்டுமே கேட்கும். ஆனால் அதன் ஒலி அதிர்வு என்று சொல்லகூடிய Frequency இல் நாம் பல மாறுதல்களை செய்யலாம். அது சில சமயம் மூளை நரம்புகளுக்கு பாதிப்பை உண்டு பண்ணும், உணர்வுகளில், ஆழ்மனத்தில், நமது எண்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். இதில் ஒரு இசையமைப்பாளர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பாடல் இனிமைக்கும் வெற்றிக்கு மட்டுமே நாம் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று பல முறை சொல்லியிருக்கிறார்.

இசை நிபுணர்கள், ஒரு இசைக் கருவி இயல்பாக வாசிக்கப்படும் போது அதற்கே உரிய இசையுடனும் அதற்குறிய ஒலி அதிர்வுடனும் இருக்கும். அதில் மாற்றம் செய்யாமல் இருப்பதே, இரு இசை நீண்ட நாள் நிலைத்திருப்பதற்கு காரணமாகிவிடுகிறது என்கிறார்கள். அந்தவகையில் அத்தகைய அசல் ஒசைகளை பீட்டல்ஸின் இசையில் நாம் கேட்கமுடியும். அதுவே, அவர்கள் இசை இன்று நிலைத்திருப்பதற்கும், எல்லோரையும் வசீகரிப்பதற்கும் காரணம் என்கிறார்கள்.

விமர்சகர்களும் ரசிகர்களும் பீட்டல்ஸின் சிறந்தப் பாடல்கள் என்று சில நூறு பாடல்களை வரிசைப் படுத்தியிருந்தாலும், அதிலும் Abbey Road என்ற ஆல்பம் ரசிகர்களிடைய பெரிய வரவேற்பு பெற்றிருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்கள் என்றால் Black Bird, The Fool on the hill, Norweign Wood, Im looking through you மற்றும் Dear Prudence.

Saturday, October 2, 2010

இசை நிறுவனம் தொடங்குவது எப்படி

இசை விமர்சனம், சாடல்கள், இசைத் திருட்டு என்று பலவற்றை படித்தும், எழுதியும் பார்த்திருக்கிறோம் இந்த முறை இசைத்துறையில் எப்படி ஈடுபடலாம் என்பதைப் பற்றிப் பார்ப்போம். இசைத்துறை ஒரு ஆனந்தமான அதேசமயம் கவர்ச்சிக்கரமான ஒரு துறை. ஆபத்தான துறையும் கூட (சில வகைகளில்).

முதலில் முக்கியமானது. பணம். எந்தத் தொழிலையும் தொடங்க பண முதலீடு அத்தியாவசியம். இதற்கும் அப்படிதான். ஒரு ரூபாயில் தொடங்கினேன், உழைப்பை மட்டுமே நம்பி இறங்கினேன் என்று எங்காவது படித்தோ கேட்டோ இருந்தால் தயவு செய்து நம்பாதீர்கள். கபிடலிஸத்தின் அடிப்படைத் தத்துவமே பணம் உள்ளவர்கள் மேலும் பணக்காரர்களாவதும் பணம் இல்லாதவர்கள் மேலும் ஏழைகளாவதும்தான். ஆக முதலில் நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டியது, பணத்திற்கு.

அடுத்தது, நிறுவனத்தை பதிவு செய்யுங்கள். இரண்டு பதிவு முறைகளை நீங்கள் பரீசிலிக்கலாம். ஒன்று, தனி நபர் நிறுவனம். மற்றது, ப்ரைவட் லிமிடெட் அல்லது மலாய் மொழியில் செண்டிரியான் பெர்ஹாட்.   இரண்டாவது முறையில் செலவுகள் அதிகம் அதேசமயம் வளர்ச்சியடைய வாய்ப்புகளும் அதிகம்.

அடுத்து நீங்கள் முடிவு செய்ய வேண்டியது எந்த மாதிரியான இசையை வெளியிடுவது என்பது. ஆன்மீக பாடல்கள் உங்களை ஏமாற்றாது. சமயத்தின் பெயரில் இந்தியர்களிடையே நீங்கள் எதை வேண்டுமானாலும் விற்கலாம். சமயப் பாடல்களை தயாரிப்பதெற்கென்று ஒரு தரப்பு தமிழ் நாட்டில் இருக்கிறது. அவர்களை அணுகி 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் 5 இசைத் தொகுப்புகளைக் கூட வாங்கலாம். சினிமா இசையை வெளியிடுவதில் ஆர்வம் என்றால், அதை எப்படி அணுகுவது என்று பார்ப்போம்.

பெரிய பெரிய படங்களின் ஆடியோக்களை அதிக விலை கொடுத்துதான் வாங்க வேண்டி வரும். நடிகர் விஜயின் காவலன் ஒரு கோடி ரூபாய்க்கு பேசப்படுகிறது. மலேசியா ரிங்கிட் மதிப்பில் ஏறக்குறைய 7 லட்சம் ரிங்கிட் ஆகும். எந்திரன் 7 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக பேச்சு. முதல் முயற்சியிலேயே அகல கால் வைக்க வேண்டாம். சின்ன சின்ன படங்களை சின்ன விலைக்கு வாங்கலாம். சில சமயம் அவைகள்தான் அதிகம் லாபம் ஈட்டித் தரும். உதாரணத்திற்கு சுப்ரமணியபுரம், சித்திரம் பேசுதடி.

அல்லது இன்னொரு வழியும் இருக்கிறது. ராயல்டி முறையில். இதை இந்திய இசை துறையில் தொடங்கி வைத்ததே எனது அகி மியூசிக் நிறுவனம்தான் என்பதை பெருமையுடன் சொல்வேன். பல பெரிய நிறுவனங்களுடன் எனக்கு தொடர்பிருந்தமையால், இது அவர்களுக்கு தெரியவரும் போது என்னிடம் அவர்களின் ஆச்சரியத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். மலேசியாவிலும் இதற்கு நாம்தான் முன்னோடி.

எனக்குத் தெரிந்தவரையில் டைம்ஸ் மியூஸிக் என்ற மும்பை நிறுவனம் தமிழகத்தில் இந்த ராயல்டி முறை பிரபலப்படுத்தியது. சின்ன சின்ன படங்களின் ஆடியோவை விற்பது பெரிய பாடாக இருந்தது அதன் தயாரிப்பாளர்களுக்கு. ஆடியோ ரிலிஸ் என்பது கோடம்பாக்கத்தில் ஒரு சடங்கு. ஆடியோ வெளியீட்டு நிகழ்வைதான், அவர்களுடையப் படத்தை வியாபாரம் பேசுவதற்கும், வினியோகஸ்தர்களை அணுகுவதற்கும் ஒரு திறவுகோளாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆடியோவில் அவர்கள் லாபம் பார்ப்பதில்லை அதேசமயம் நட்டமே அடைகிறார்கள். ஆனால் பாடல்கள் திரைப்படத்தை தொலைக்காட்சியில் இலவசமாக விளம்பரம் செய்ய பெரிதும் உதவுகிறது. அதற்காகவே பாடல்கள் அவர்களின் சினிமாவில் கட்டாயம் தேவைப்படுகிறது. அதனால் பல சமயங்களில் ஆடியோ விற்பனையைப் பற்றி அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அப்படி தயாரிப்பாளர்கள் ஆடியோ விற்பனையை கைவிட்டிருந்த நிலையில் ஆடியோவை விற்றுத் தருகிறோம் என்று டைம்ஸ் மியூசிக் முன்வந்தார்கள். ஆனால் எவ்வளவு விற்கிறதோ அந்த லாபத்தை தயாரிப்பாளரும் இசை நிறுவனமும் பகிர்ந்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கப் பட்டது. இதுதான் ராயல்டி முறை.

இந்த வழிமுறையின் அடிப்படையில் இசை நிறுவனம் மிக குறைந்த முன்பணம் தரலாம். அல்லது தராமல் கூட போகலாம். அவர்களின் செலவு அதை உற்பத்தி (Manufacturing) செய்வதும் வினியோகிப்பதும். முன் பணம் குறைவாகவோ அல்லது தரப்படாமலோ இருக்கும் பட்சத்தில், தயாரிப்பாளர் அதன் உரிமத்தை தக்க வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட வரையரைக்கு மட்டும் இசை நிறுவனத்திற்கு அதை வினியோகிக்கும் உரிமத்தை வழங்கலாம்.  3 வருடம் அல்லது 5 வருடம்.

அதை தொடர்ந்து திங் மியூஸிக், சாகா மியூசிக் என்று பலர் இப்பொழுது அந்த வழியை பின்பற்றுகிறார்கள். போட்டியாளர்களை சமாளிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு யுக்தியை கையாளுகிறார்கள். உதாரணத்திற்கு, திங் மியூஸிக், தயாரிப்பாளர்களுக்கு இலவசமாக ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தி தருகிறது. பெரிதாக ஒன்றும் இல்லை, அவர்களது சத்யம் சினிமா தியேட்டரை அந்த நிகழ்வுக்கு தருகிறார்கள்.

நீங்களும் ஏதாவது ஒரு வழியில் இந்த தயாரிப்பாளர்களை அணுகலாம். சிலர் வெறும் 500 சிடிகள் அல்லது 600 சிடிகள் தந்தால் போதும் அல்லது ஒரு பேருந்தின் பின்புறம் விளம்பரம் தந்தாலோ அல்லது 3 பத்திரிக்கைகளில் ஒரு நாளைக்கு விளம்பரம் தந்தாலோ போதும் என்றுகூட சொல்வதுண்டு. அதற்காக மொத்த உரிமத்தை உங்களுக்கு தரவும் தயாராக இருக்கிறார்கள்.  நீங்கள் செய்ய வேண்டியது எதாவது ஒரு ஆடியோவை சிறப்பாக விளம்பரம் செய்து வெளியிட்டால் போதும், தரகர்கள் உங்களை தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

நீங்களே சொந்தமாக இசைத் தயாரிப்பது இன்னொரு வழி அதற்கு கொஞ்சமாவது இசை ரசிப்பு திறனாவது உங்களுக்கு இருக்க வேண்டும். இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், ஒலிப்பதிவு என்று மொத்த செலவுகளையும் ஒரு லட்ச ரூபாயில் நீங்கள் அடக்கி விடும்படியாக பட்ஜட் செய்ய வேண்டும். அதிக செலவில் சிறப்பாகக் கூட தயாரிக்கலாம். இன்றைய நிலையில் கள்ளப் பதிப்புகள் மற்றும் இணைய பதிவிரக்க பாதிப்புகளால் இசை விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால். அதிகம் செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

மேலே கூறியவைகள் எல்லாமே அனைத்துலக விநியோகத்திற்கான விலைப் பட்டியல். அது இல்லாமல் நீங்கள் இந்தியாவிற்கு மட்டும், மலேசியாவிக்கு மட்டும் அல்லது டுபாய்க்கு மட்டும் என்று பிரித்துக் கூட உரிமங்களை வாங்கலாம்.

சினிமா இசைக்கும் தனி இசைத்தொகுப்புக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் சினிமா இசை குறைந்தது 6 மாத காலத்திற்குள் அதன் ஆயுளை முடித்து கொள்ளும். அதற்கு பிறகு உங்களால் விற்கவே முடியாது. சினிமா இசையை பொறுத்தவரை என்றும் உங்களால் விற்க முடியும் என்று சொன்னால் அது இளையராஜாவின் இசை மட்டுமே. அதுவும் அவரது நிகழ்கால திரை இசை நீங்கலாக.

ஆனால் தனி இசைத் தொகுப்போ அல்லது ஆன்மீக இசை தொகுப்போ பல நூறு ஆண்டுகள் கூட விற்க முடியும், நல்ல தரத்துடன் இருந்தால். ஒரு சினிமாவின் மீதான மோகம் அறுபது நாள்தான். ஆனால் நல்ல தனி இசை தொகுப்புக்கு அப்படியில்லை. அது பக்தி இசையாக இருக்கலாம், கர்நாடகமா இருக்கலாம் அல்லது பாப் இசையாக கூட இருக்கலாம். ஆனால் தமிழிலும் மற்ற இந்திய மொழிகளிலும் தனி இசை (ஆன்மிகம் நீங்கலாக) பிரபலமடையாததற்கு காரணம் சிறந்த அணுகுமுறை இதுவரை இல்லை. ஆனால் நிச்சயமாக சிறந்த எதிர்காலம் உண்டு. அதோடு சினிமா இசையின் ஆயுள் குறைவாக இருந்தாலும் இந்த குறைந்த ஆயுளில் அது எட்டும் தூரம் அதிகம். அதுக்கு காரணம் சினிமா நட்சத்திரங்கள். அவர்களை ப்ரண்ட்ஸ் (Brands) என்று சொல்லலாம். அந்த ப்ரண்டின் காரணமாகத்தான் விற்கப் படுகிறது. தனி இசை தொகுப்புகளில், பாடகர்களுக்கு இந்த ப்ரண்டை உங்கள் மார்கெட்டிங்க திறனால் உங்களால் உருவாக்க முடிந்தால், நடிகர்களுக்கு கிடைக்கும் புகழை இவர்களுக்கும் ஏற்படுத்தி உங்கள் ஆடியோவை விற்கலாம்.

சரி, இப்பொழுது உங்களுக்கு இசை கையில் வந்துவிட்டது. அடுத்தது அதை எப்படி இப்பொழுது வெளியிடுவது என்பதுதான். ஆனால் அதற்கு முன்பாக நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது உங்கள் வருமானத்திற்கான வாயில்களையும் அதன் அளவுகளையும்.

முதலாவது - சிடி விற்பனை, இரண்டாவது - ரிங்டோன் மற்றும் காலர் டோன் எனப்படும் மொபைல் பதிவிரக்கங்கள், மூன்றாவது - டிஜிட்டல் பதிவிரக்கம், நான்காவது - வானொலி, தொலைக்காட்சி  மற்றும் கலை நிகழ்ச்சி பயன்பாடுகள், ஐந்தாவது - விளம்பரம் அல்லது பிற பயன்பாடுகள், ஆறாவது -  மறு பதிப்பு அல்லது ரீமிக்ஸ்.

சிடி விற்பனை - முதலில் எந்த ஏரியாவிற்கு அனுப்புவது, எவ்வளவு சிடிகள் தேவைப்படும் என்பதை கணக்கெடுத்துக் கொள்ளுங்கள். சிடி விநியோகம் பெரும்பாலும் விநியோகஸ்தர்கள் வழிதான் செயல்படுகிறது. மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஒரு வாகனம் உங்களுக்கு இருந்தால் நீங்களே சொந்தமாக விநியோகம் செய்யலாம். அல்லது இங்கும் நீங்கள் ஒரு விநியோகஸ்தரை அமர்த்திக்கொள்ளலாம். குறைந்தது 1000 முதல் 2000 சிடிகளை மட்டும் நீங்கள் உற்பத்தி செய்து விநியோகத்திற்கு ஒப்படைத்து விட்டு, கையிருப்பு முடிய முடிய நீங்கள் மேற்கொண்டு உற்பத்தியை தொடரலாம்.

இதில் மிகப் பெரிய சவால், கடைகளிலிருந்தும் விநியோகஸ்தர்களிடமிருந்தும் விற்பனையான சிடிகளுக்கு பணத்தை பெறுவதுதான். அது உங்களால் வெற்றிகரமாக செய்ய முடிந்தால், நீங்கள் இந்தத் துறையில் நீடித்திருக்கலாம். பெரும்பாலான கடைகள் விற்பனையான சிடிகளுக்கான பணத்தை தருவதற்கு 3 முதல் 6 மாதம் வரை எடுத்துக் கொள்வார்கள். அதிலும் நீங்கள் இந்த 6 மாத காலத்தில்  ஒரு சிடி மட்டுமே வெளியிட்டிருந்தீர்கள் என்றால் உங்கள் பணத்தை தருவதில் மிகப்பெரிய அலட்சியம் காட்டுவார்கள். குறைந்தது 2 அல்லது 3 சிடிகளையாவது இந்த 6 மாதக் காலத்தில் வெளியிட்டு விட்டீர்கள் என்றால் உங்கள் குரலுக்கு அதிகாரமிருக்கும்.

ரிங்டோன் அல்லது காலர் டோன் தான் ஆசியாவில் அதிகம் விற்பனையாகும் இசை படிமங்கள். இது ஒருவகையில் உயிரியல் பரிணாமம் போல்தான். டார்வின் தியோரியின் படி நாம் இன்னும் அழிந்துப் போகாமல் இருப்பதற்கு காரணம் இந்த பரிணாம வளர்ச்சிதான். அதுபோல் இசை துறை கணிணி தொழில்நுட்ப வளர்ச்சியில் கள்ளபதிப்புகளுக்கு இலகுவாக இடமளித்து அழிவை நோக்கி போய்க்கொண்டிருந்த நிலையில் அதே தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி அதன் தொடர் வாழ்வுக்கு இன்னொரு வழியை ஏற்படுத்திக் கொண்டது.  இந்த காலர் டியூன் மோகத்தை என்னால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. முழு பாடலையும் பதிவிரக்கம் செய்ய இயலாது. அதிலும் முக்கியமாக அதை நீங்கள் கேட்கவே முடியாது, நீங்கள் கேட்பதற்காக உங்கள் பணத்தை நீங்கள் செலவலிக்கவில்லை என்பதும் உங்களுக்கு தெரியும், இருந்தும் அதி வேகமாக அதிகமாக விற்பது இந்த படிமங்கள்தான். அதனால்தான் இந்த விந்தை நிகழ்வை நான் டார்வின் தியோரியோடு ஒப்பிட விரும்புகிறேன்.

இதில் பெரும் லாபம் சம்பாதிப்பவர்கள் மொபைல் நிறுவனங்கள்.  ஏறக்குறைய 60% முதல் 70% வரை அவர்கள் எடுத்துக்கொண்டு மீதம் 30% தான் உங்களுக்கு வரும். அதிலும், இதற்கான தொழில் நுட்ப வசதியை மொபைல் நிறுவனங்கள் ஏற்படுத்தித் தருவதில்லை. அவர்கள் அந்த வசதியை ஏற்படுத்தி தரும் பிற நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு அவர்கள் மூலமாகத்தான் உங்கள் இசை மொபைல் தளத்தில் இடம் பெற முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியிருப்பார்கள். இந்த தொழில் நுட்ப வசதியை ஏற்படுத்தி தரும் சில நிறுவனங்கள் காலர் டோன் வழி நீங்கள் பெறும் வருமானத்தில் 10% மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை உங்களுக்கு தருவார்கள். மற்றும் பலர் 50% வரை எடுத்துகொள்வார்கள். அப்படிப் பார்த்தால் நீங்கள் மொத்தமாக 15% தான் உங்கள் வருமானமாக பெற முடியும். இதில் நீங்கள் தயாரிப்பாளர்களிடம் ராயல்டி முறையில் ஒத்துக்கொண்டிருந்தால் உங்களுக்கு 7.5% தான் மொத்த வருமானம். மொபைல் நிறுவனங்களின் இந்த ராட்ச ஆக்கிரமிப்பை இந்த முறை மும்பையில் நடந்த NOKIA MUSIC CONNECT நிகழ்வில் பலரும் குற்றம் சாட்டினார்கள். இதற்கு நிச்சயம் ஒரு தீர்வை எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா மலேசியா மற்றும் சிங்கப்பூர் என்று எல்லா நாடுகளும் இந்த முறையைதான் பின்பற்றுகிறது.


அடுத்தது டிஜிட்டல் பதிவிரக்கம். இணைய சட்டவிரோத பதிவிரக்கங்கள் பற்றி நாம் அதிகம் கூச்சலிடுகிறோம். ஆனால் அனுமதிக்கப்பட்ட பதிவிரக்கத் தளங்கள் என்று பார்த்தால எதுவுமே இல்லை. இப்பொழுதுத்தான் இந்திய இசை நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ITUNES, AMAZONS போன்ற பதிவிரக்க தளங்கள் வழி தங்கள் பாடல் கிடைக்க வழிவகுக்கிறது. ஆனால் எல்லா தளங்களுமே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குத் தான் தங்கள் சேவைகளை வழங்குகிறது. அதனால் அதிகபடியான விற்பனையை நாம் இதில் எதிர்பார்க்க முடியாது. இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் இன்று NOKIA மற்றும் CDBABY போன்ற தளங்கள் இந்தியா மலேசியா உட்பட ஆசிய நாடுகளுக்கு தங்கள் சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.  இது இசை நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.  ரசிகர்களுக்கும் தான்.

இந்த இணைய பதிவிரக்க செயலிகள் அல்லது தளங்களுக்கு உங்கள் பாடல்களை தர வேண்டும் என்றால், டிஜிட்டல் விநியோகஸ்தர்களை அணுகலாம். இந்தத் தளங்களுடன் நீங்கள் தொடர்புக் கொண்டால் அவர்களே நல்ல டிஜிட்டல் விநியோகஸ்தர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். நீங்களே நேரடியாக இந்தத் தளங்களுக்கு தருவதென்பது இயலாத காரியம் ஆனால் உங்களிடன் 1 கோடிக்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கிறதென்றால் அவர்கள் உங்களை அவர்களது விநியோகஸ்தர்களாக நியமித்து கொள்ளலாம்.  இருந்தபோதும் பாடல்களை அவர்களின் செயலியில் அல்லது தளத்தில் பதிவேற்றம் செய்ய உங்களுக்கு, கணிணி தொழில் நுட்பம் தெரிந்த ஒரு நபர் தேவைப்படும்.

இந்த பதிவிரக்கத் தளங்கள் மொபைல் நிறுவனங்கள் போல் அல்ல. அவர்கள் உங்கள் விற்பனையில் இருந்து எடுத்துக்கொள்ளும் அதிகபடியான லாபம் 10% அல்லது 20% உட்பட்ட லாப விகதிமே. விநியோகஸ்தர்களும் அப்படிதான். சிலசமயம் விநியோகஸ்தர்களும் பதிவிரக்கத் தளங்களும் சேர்ந்தே மொத்தம் 10% மட்டுமே எடுத்துக் கொள்ளும் நல்லவர்களாக இருப்பார்கள். பலர் உங்களுக்கு பதிவிரக்கங்கள் நடக்கும் ஒவ்வொரு முறையும் விற்பனை தகவல்களை தந்து விடுவார்கள். ஆனால், இதில் உங்களுக்கு அந்நிய செலவானிகள், வெளிநாட்டு வரிகள், பண பரிமாற்ற வங்கி செலவுகள் என்று சில செலவுகள் இருக்கும். இவை எல்லாமே ஏறக்குறைய 10% - 20% இருக்கும்.

CDBABY, AMAZON போன்ற நிறுவனங்கள் உங்களுடைய சிடியை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கடைகளுக்கு கூட விநியோகம் செய்யும் சேவையை வழங்குவார்கள். இது கொஞ்சம் அதிகபடியான செலவுகளை ஏற்படுத்தும்  சேவைதான். இருந்தாலும் GRAMMY உட்பட சில சர்வதேச விருதுகள் உங்கள் நிறுவன வெளியீடுகளுக்கு வேண்டும் என்றால் நீங்கள் சிடி விற்பனையில் அக்கறை காட்டலாம். காரணம் இந்த விருதுகளுக்கான போட்டிகளில் பங்கெடுக்க நீங்கள் கட்டாயம் சிடி விற்பனையை காட்டியாக வேண்டும். டிஜிட்டல் விற்பனைகள் கணக்கில் எடுத்துகொள்ள பட மாட்டாது.

அடுத்ததாக, வானொலி, தொலைக்காட்சி மற்றும் பொது நிகழ்வு அல்லது கலை நிகழ்ச்சிகள் வழிப் பெறப்படும் வருமானம். அதாவது உங்கள் பாடல்களை பயன்படுத்துகிறவர்கள் உங்களுக்கு தரும் FEE அல்லது பயனீட்டிற்கான தொகை. இவைகள் இரண்டு வகைப்படும். 

ஒன்று Phonograph Public Performance ராயல்டி மற்றொன்று Public Performance Royalty. முதலாவது ராயல்டி உங்கள் வெளியீடுகளை வானொலியில் ஒலிப்பரப்புவதற்காக தரப்படும் ராயல்டி. அல்லது உங்கள் பாடல் தொலைகாட்சியிலோ அல்லது கலை நிகழ்வுகளிலோ பயன்படுத்தப்பட்டால் தரப்படு ராயல்டி. இதை நீங்கள் நேரடியாக வானொலி தொலைக்காட்சிகளிடம் இருந்து பெறலாம். ஆனால் சிறிய நிறுவனங்களை அவர்கள் பொறுப்படுத்துவதில்லை. எந்த இந்திய தொலைக்காட்சியும் இந்த ராயல்டிகளை தருவதில்லை. இந்திய தொலைகாட்சியென்று நான் குறிப்பிடுவது எல்லா நாடுகளில் இயங்கும் தமிழ் இந்தி நிகழ்ச்சிகளை வழங்கிவரும் தொலைக்காட்சிகள்.  முதல் வகை இசைத் திருட்டு, கள்ள பதிப்புகளும் இணைய பதிவிரக்கங்களும் என்றால். இது இரண்டாம் வகை.

எல்லா நாடுகளிலும் இசை நிறுவனங்கள் ஒன்றினைந்து ஒரு இயக்கத்தை நிறுவி இருக்கிறார்கள். அவர்களிடம் உறுப்பினர்களாக நீங்கள் சேருவதன் வழி, அவர்கள் மூலமாக நீங்கள் இந்த ராயல்டிகளை பெற்றுக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, இந்தியாவில் PPL மற்றும் SIMCA, மலேசியாவில் RIM அல்லது PPM.  ஆனால் நீங்கள் உறுப்பினராக இணைய கொஞ்சம் சந்தா செலுத்த வேண்டி வரும்.

அல்லது எல்லா வழிகளும் பணம் தரும் வழியென்று எண்ணாமல், உங்கள் இசை வானொலிகளில் ஒலிபரப்படுவதும், தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படுவதும் உங்கள் பாடல்களுக்கு கிடைக்கும் விளம்பரம் என்று சகித்துக் கொள்ளுங்கள். 

இன்னொரு ராயல்டி உண்மையில் இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் தரப்படுவது. அவர்களுக்கும் 50% தரப்பட்டு மீத 50% சதவிகிதம் பதிப்பாளர்களுக்குத் தரப்படும். இது பெறும்பாலும் வெளிநாடுகளில்தான் நடப்பில் இருக்கிறது. இந்தியாவில் பதிப்பாளர்கள் என்பது என்பதற்கு பதில் ஆடியோ நிறுவனங்களுக்கு வழங்கிவருகிறார்கள்.  இந்த ராயல்டியை பெற நீங்கள் காப்புரிமை இயக்கத்தில் உறுப்பினர் ஆக வேண்டும். இது அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்படும் காப்புரிம இயக்கம். இந்தியாவில் IPRS, மலேசியாவில் MACP, அமெரிக்காவில் ASCAP ஐரோப்பாவில்  PRS மற்றும் BMI போன்றவைகள் இத்தகைய காப்புரிம இயக்கங்கள்.

இது தவிர விளம்பரங்களுக்கு உங்கள் பாடல்கள் பயன்படுத்தப்படுவதற்கும், சினிமாவில் சில காட்சிகளுக்கு பயன்படுத்தப் படுவதற்கும், கலை நிகழ்ச்சியில் பாடப் படுவதற்கும் என்று உங்கள் பாடல்கள் எங்கு பயன்படுத்தப் பட்டாலும் அதற்கு உங்கள் பாடலை பயன்படுத்துபவர்கள் ராயல்டி அல்லது பயனீட்டு தொகையை வழங்கியாக வேண்டும்.  ஆனால் இந்தியர்கள் அதிலும் நமது தமிழர்கள் இதை பொருட்படுத்துவதே இல்லை. சரிகாமா போன்ற பெரிய நிறுவனங்கள் வக்கீல் நோட்டீஸ், வழக்கு என்று பயமுறுத்தி சட்ட வழிகளில் மிரட்டி உபயோகிப்பவர்களிடமிருந்து ராயல்டியை வாங்கிவிடுவார்கள். சின்ன நிறுவனங்கள் அந்த சவால்களை எதிர்நோக்கிதான் ஆகவேண்டும். கொஞ்சம் பணமும் செலவு பண்ண வேண்டும்.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய பயனீட்டுக்கு உங்கள் பாடல்களை தருவதற்கென்றே சில நிறுவனங்கள் உண்டு. அவர்களிடம் உங்கள் பாடல்களை பதிவு செய்துக் கொண்டால் அவர்கள் உங்கள் பாடல்களை விளம்பரப் படுத்தி, அனுமதி பெற்றுத் தருவதோடு அதற்கான ராயல்டியையும் தருவார்கள். ஒரு ஹலிவூட் படத்திலோ விளம்பரத்திலோ உங்கள் பாடல் இடம் பெற்றால் அது மிகப்பெரிய விளம்பரமும் லாபகரமானதாகவும் உங்களுக்கு இருக்கும். இந்தியாவிலும் மலேசியாவிலும் இதைக்கூட ஒரு தொழிலாக நீங்கள் செய்ய நல்ல வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்காவில் PUMP AUDIO என்ற நிறுவனம் நல்ல உதாரணம், இதுபோன்ற இசை பயனீட்டிற்கு அனுமதி வழுங்குவதில்.

ஆனால் இதற்கெல்லாமே அடிப்படையாக இருக்கப் போவது உங்களுடைய ஒப்பதங்கள்தான் (AGREEMENTS). தயாரிப்பாளர்களுடன், இசையமைப்பாளர்களுடன், விநியோகஸ்தர்களுடன், என்று எல்லா தரப்புகளுடனும் நீங்கள் செய்துக்கொள்ளும் ஒப்பொந்தங்கள் மிக மிக முக்கியமானது. சிறு தவறுகளோ அல்லது கவனக்குறைவோ உங்கள் மொத்த உழைப்பையும் முதலீட்டையும் பாழ் படுத்திவிடும் அபாயம் உண்டு. அதனால் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு வழக்குறைஞர் இருந்தாக வேண்டும்.  அதிலும் காப்புரிமம் பற்றிய ஞானம் உள்ளவராக இருத்தல் அவசியம். 

அல்லது இணையங்களில் நீங்கள் தாராளமாக பல ஒப்பந்த சாம்பிள்களை பெற்றுக்கொள்ளலாம். கொஞ்சம் ஆங்கில ஞானம் இருந்தால் உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்கள் அதில் பல மாற்றங்களை செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். சில சமயங்களில் சிறந்த ஒப்பந்தங்களை தயார் செய்து தர வக்கீல்கள் 50,000 ரூபாய் அல்லது 5,000 மலேசிய ரிங்கிட் வரை கேட்பது உண்டு. அப்படியிருப்பின் நீங்களே தயாரிப்பதுதான், சிறந்த வழிமுறை.

இசைத்துறை என்ற தொழில்நுட்பத்தின் ஊடாக பல வாயில்களை இன்று நமக்கு தந்துள்ளது. உதாரணத்திற்கு மொபைல் அப்லிகெஸன் mobile applications, itunes applications, கணிணி விளையாட்டிற்கான இசை, Loops, Samples, மெமொரி கார்டுகளிலும் KIOSK வழி பாடல்களை விற்பது என்று பல வாசல்கள் உங்கள் முன் இருக்கிறது. இதற்கெல்லாம் செலவுகளும் வேலைகளும் அதிகம். சிறந்த அணுகுமுறைகளின் வழிதான் நீங்கள் லாபத்தை ஈட்ட முடியும் இல்லையென்றால் இவைகள் எல்லாம் உங்கள் நிறுவனத்தைப் பற்றிய பெரிய பிம்பங்களை உருவாக்க மட்டுமே உதவும், லாபம் ஈட்டித் தராது.

நமது உள்ளூர் கலைஞர்களும், தனி இசை தொகுப்பு வெளியிட விரும்பும் இந்திய இசை கலைஞர்களும் சினிமா இசை மோகத்தில் இருக்கும் இசை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தொடர்புக் கொண்டு கெஞ்சிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், தாங்களே சொந்த இசை நிறுவனங்களை நிறுவலாம். மேலை நாடுகளில் இது ஒரு கலாச்சாரமாகி அப்படி நிறுவப்படும் நிறுவனங்களை Independent Labels என்றும் அத்தகைய கலைஞர்களை Independent Artists என்றும் அழைக்கிறார்கள். எனக்கொரு போட்டியாளர் உருவாவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

PEEPLI LIVE

இன்று காலை Sun நாளிதழில் அமிர் க்ஹானின் Amir Khan பீப்லி லைவை (Peepli Live) படம் இந்த முறை வெளிநாட்டு படங்களுக்கான ஆஸ்கார் போட்டிக்கு இந்தியாவால் தேர்ந்தெடுக்கப் பட்டதை படிக்க நேர்ந்தது. சிறந்த தேர்வு என்று நான் நினைக்கிறேன்.

மலேசியாவில் அந்தப் படம் இன்னும் திரைக்கும் வரவில்லை விசிடி டிவிடியும் கிடைக்காது. காரணம் அது துளிகூட சினிமா சாயம் இல்லாத அப்பட்டமான கிராமிய சித்திரம். கடந்த மாதம் இந்தியாவில் ஹரியானாவில் உள்ள கர்நாள் என்ற இடத்திற்கு சென்றிருந்த போது காரில் ஒரு பாடலை கேட்க நேர்ந்தது. டேசு மேரா ரங்கு தேசிய பாபு, காட்டு காட்டு மே கட்டா என்று வரும் அசல் வட இந்திய கிராமிய பாடல். எனது வட இந்திய பஞ்சாபி நண்பர் அந்தப் பாடலை நான் விரும்புவதை கண்டு பெரும் வெறுப்பே அடைந்துவிட்டார். அவரோ நாள் முழுக்க விண்ணைத் தாண்டி வருவாயாவில் வரும் ஆஹா அடடா பெண்ணே பாடலில் மெய்மறந்துக் கிடந்தார்.  இந்த பாடலை மேல் எனக்கிருந்த மோகத்தால் அந்தப் படம் திரைக்கு வந்திருப்பதை கூறியதும் நாங்கள் இருவரும் செல்வதென்று முடிவு பண்ணினோம்.

படம் ஒரு டாக்குமெண்டரி போல் இருந்தாலும் அரங்கமே சிரித்துக்கொண்டே இருந்தது. அந்த அளவு படம் முழுவதும் நகைச்சுவை. ஆனால் சத்தியமாக எனக்கு எதுவும் புரியவில்லை. மொழி புரியவில்லை ஆனால் உணர்வையும் செய்தியையும் உள்வாங்கிக் கொண்டேன். நண்பர் சொன்னார், படம் முழுவதும் கொச்சை வார்த்தைகள் அதிகம். எப்படி சென்சர் அனுமத்தித்தார்கள் என்று தெரியவில்லை என்றார். இந்த படம் முழுக்க பாலாவின் நான் கடவுளில் வரும் பிச்சைக்காரர்களையும் அவர்கள் வாழ்க்கையையும் பாலா காட்டியிருந்தது போன்ற பிரமையையே ஏற்படுத்தியது. ஆரியாவின் ஹிரோயிஸம் இல்லாது அந்த பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை மட்டுமே எந்த சினிமா பூசலும் இல்லாது எடுத்திருந்தால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது இந்தப் படம். இதிலும் அதில் விரைவி கிடந்தது போல நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால் கதை நகைக்கக் கூடியது அல்ல.

விவசாயிகள் பலர் தொடர்ந்து தற்கொலைகள் செய்துக்கொள்கிறார்கள். காரணம் விளைச்சல் முன்போல் இல்லை, அரசாங்க உதவி இல்லை என்று பல. அரசாங்கம் அவர்களுக்கு தரும் நஷ்ட ஈடும் கடனும் அரசியல் வாதிகளால் சுரண்டப்படுகிறது. கடனை கட்ட வழியில்லாதவர்கள் நிலத்தை விற்றுவிடுகிறார்கள். விவசாய அமைச்சரோ, இதற்கெல்லாம் தீர்வு, தொழில் நுட்ப வளர்ச்சியை நோக்கி நாம் செல்வதுதான் என்கிறார். இதைப் பற்றி கட்டுரை எழுத வற்புறுத்தப்பட்டு, சமூக அக்கறையும் கொஞ்சம் கொண்ட ஒரு நிருபரை பிப்லி என்ற அந்தக் கிராமத்திற்கு அனுப்புகிறார் பத்திரிக்கை ஆசிரியர். அவருடைய வேலை, சமீபத்தில் இறந்த ஒரு விவசாயியின் குடும்பத்தைப் பற்றி செய்தி சேகரித்து வருவது. அவர்கள் இது பற்றி பேசி முடிக்கும் நிலையில் மின்சாரம் வருகிறது. அப்பாட என்று அச்சு வேலைகள் ஆரம்பிக்க ஆயுத்தமாகும் போது மீண்டும் மின்சாரத் தடங்கள் என்று இது போன்ற நிகழ்கால் இந்தியாவை பல இடங்களில் எந்த விமர்சனமும் செய்யாமல், பொறுப்படுத்தாமல் யதார்த்த இந்திய குடிமகனின் மனநிலைபோல் பல காட்சிகள் நகர்ந்து செல்கிறது.

நிருபர் அந்த விவசாயியை தேடிப்போகும் போது வழியில் ஒரு வயதான முதிய விவசாயியை காண்கிறார். அவரிடம் விசாரிக்கிறார். அவரோ இவரை பொறுப்படுத்தாமல் குழித்தோண்டிக் கொண்டிருக்கிறார். ஏழ்மையால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது அவர் தோற்றத்தில் தெரிகிறது. அவர் இப்படி தினம் தினம் தன்னை வருத்தி குழி தோண்டிக் கொண்டேயிருக்கிறார். அவரை யாருமே பொருட்படுத்தவே இல்லை. இந்த நிருபரும். கடைசியில் அவர் தற்கொலை செய்துக் கொண்டபிறகு, அந்த குழியை இந்த நாளுக்காகதான் அவர் இதுநாள்வரை  வெட்டி வந்தார் என்று தெரியும் போது நிலைகுலைந்து போகிறான் இந்த நிருபன். (குழி வெட்டியது கிணற்றுக்காக என்று நணபர் யுவராஜன் இப்பொழுது கூறினார், இதெல்லாம் சினிமா கண் உள்ளவர்களுக்குதான் புரியும் மென்று வழக்கமான ஈவு இரக்கமற்ற தொனியிலே நக்கலடித்தும் விட்டார்).

அவன் தேடிவந்த அந்த இறந்த விவசாயியைப் பற்றியும் அவன் குடும்பம் பற்றியும் செய்தி சேகரிக்க முடியாமல் வருத்ததுடன் திரும்பும் வேலையில், அரசாங்க உதவி நிதியை வேண்டி தினம் தினம் அந்த கிராமத்து ஆழுங்கட்சி தலைவரிடம் நடந்து நடந்து ஏமாற்றம் அடைந்து திரும்பும் இரு சகோதரர்கள், இதே நிலை நீடித்தால் நாமும் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டியதுதான், என்று பேசிக்கொண்டு போக, அந்த நிருபர் அவரை பேட்டி எடுத்து, தனது இறுதி நாளை எண்ணிக் கொண்டிருக்கும் இன்னொரு ஏழை விவசாயி என்ற தலைப்புடன், இவரும் தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறார் என்று செய்தி வெளியிட, அது பரபரப்பாகிறது.

சமீபத்தில் விவசாயத் துறை அமைச்சரிடம் பேட்டி எடுத்து பரபரப்பாக்கிய தொலைக்காட்சி நிறுவனமொன்று இந்த தற்கொலைப் பற்றிய செய்தியை தங்களது முந்தைய பரபரப்பு செய்தியுடன் தொடர்புபடுத்தி இன்னும் பிரபலமடைய, அந்த பத்திரிக்கை நிருபரை தொடர்புக் கொண்டு அந்த கிராமத்துக்கு செல்கிறார்கள். அந்த விவசாயியையும் அவனது குடும்பத்தை சில செயற்கை நாடகங்களுடன் செய்தியாக வெளியிட அது இன்னும் பிரபலமடைகிறது. அதன் வெற்றியால் (PR Rate), எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களும் அங்கு படையெடுக்கிறது. அந்த விவசாயியோ எதுவும் சொல்ல இயலாதனாயும், அதை தனக்கு எந்த வகையிலும் சாதகமாக பயன்படுத்தி க் கொள்ளத் தெரியாதவனுமாய், நடுக்காட்டில் விடப்பட்டவன் போல் இருக்கிறான். இவனுடைய செய்தி ஏற்கனவே பத்திரிக்கையில் வந்ததற்கு ஆளுங்கட்சி அரசியல் தலைவரின் அடியாட்களிடம் ஏற்கனவே அடியும் வாங்கி இருப்பதால் மேலும் பயந்துப் போய் இருக்கிறான்.

இப்பொழுது அவனுக்கு உதவிகள் கிடைப்பதற்கு மாறாக, அவனது தின வாழ்க்கை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட ஆரம்பித்துவிட்டது. அவன் காலையில் எழுந்து காலைக்கடன் முடிப்பதைகூட படம் பிடிக்க இந்த சேனல்கள் அவனை துரத்திக்கொண்டேயிருந்தது. ரியலிட்டி நிகழ்ச்சிகள் இன்று தொலைக்காட்சியை ஆக்கிரமித்து பல நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பதோடு ஒட்டு மொத்த சமூகத்தின் கலாச்சாரத்தையும் பாதித்து வருகிறது. ஒரு ரியலீட்டி நிகழ்ச்சியால் தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் ‘பிடிக்கவில்லை யென்றால் சேனலை மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று சமீபத்தில் டில்லியில் தீர்ப்பு வழங்கியது கவனிக்கப் பட வேண்டும். ஆக இந்த ரியலீட்டி நிகழ்ச்சிகளின் மோகத்தாலும் தாக்கத்தாலும் மீடியாக்கள் இவனது அவலத்தையும் நிகழ்ச்சியாக வழங்க தயாராகிவிட்டது. அவனது வீடும், வாழ்க்கையும், கிராமமும், விவசாயிகளின் சோகமும் ஒரு ரியலீட்டி நிகழ்ச்சிக்கு களமாக மாறி, அவனது வீட்டை சுற்றி செட்டுகள் போடப்பட்டு, விளக்குகள் பொறுத்தப்பட்டு, அன்றாட தொலைக்காட்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க பெரும் நாடகம் தினம் தினம் அங்கு அரங்கேரத் தொடங்கியது.

மறு புறம் இதை வைத்து ஒரு தேச அரசியலே அரசாங்கத்தாலும் அரசியல் கட்சிகளாலும் நடத்தப்பட்டது. சாதி அரசியலும் இதில் பங்கு சேர்த்தது. சில அரசு சாரா இயக்கங்கள் அவனுக்கு பிரயோசனமே இல்லாத பல உதவிப் பொருட்களை அந்த விவசாயிக்கு வழங்கி சென்றது. அந்த குடும்பத்தின் வறுமை ஒழியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் இதைப்பற்றி முதலில் செய்தி வெளியிட்ட பத்திரிக்கை நிருபன் தன்னால் எதுவும் செய்ய இயலவில்லையே என்று வறுத்தப்படுகிறான். பல சமயங்களில் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு அவன் முன்னிறுத்தும் கருத்துக்களில் உடன் பாடு இல்லாமல் போகிறது. 

இது எல்லாம் ஒரு புறம் நடந்து வர, ஏற்கனேவ பல நாட்களாய் குழி தோண்டி வந்த ஏழை வயோதிக விவசாயி எலி மருந்து உண்டு இறந்து விடுகிறான். அங்கு ஒரு சிலரே இருக்கிறார்கள். இந்த நிருபரும். அவன் முதலில் விவசாயிகளின் தற்கொலை செய்தியை வெளியிட்டதே இந்த மாதிரியான கொடுமை இனி வரக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால் அது மிகப் பெரிய வியாபாரமாகவும் அரசியலாகவும் சில தரப்பால் உருவாக்கப்பட, இன்னொரு விவசாயி இந்த மீடியாக்களையும் அரசியல் வாதிகளையும் கொஞ்சமும் உறுத்தாமல் இறந்து போகிறான். அதிலும் பிறருக்கோ அல்லது அவனை சுற்றியுள்ள மற்ற ஏழை விவசாயிக்கோ சிரமம் வைக்காமல் குழியையும் தோண்டிவைத்து விட்டு இறந்துபோகிறான். 

இதற்கிடையில் தொலைக்காட்சியில் தான் காலைக் கடன் கழிப்பதை யாரும் படம் எடுத்து விடக்கூடாது என்று பதுங்கி பதுங்கி ஒதுக்குப்புறமாய் ஒதுங்கும் அந்த நாயக விவசாயியை ஆளும் கட்சியின் கிராமத்து அரசியல் தலைவன் கடத்தி சென்றுவிடுகிறான். அவனால் ஆட்சிக்கே ஆபத்து வரும் நிலை வந்திருப்பதால் என்று நான் நினைக்கிறேன். இதை அந்த நிருபன் கண்டு பிடித்து விடுவதோடு தான் கூட்டி வந்த தொலைகாட்சி நிறுவனத்திற்கு விசயத்தைச் சொல்ல அவர்கள் ரகசியமாகப் புறப்பட மற்றத் தொலைக்காட்சி நிறுவனங்களும் இவர்களை மோப்பம் பிடித்து பின் தொடர்கிறது. இறுதியில் நடக்கும் கிளைமாக்ஸ் குளுறுபடியில் அந்த விவசாயியை அடைத்துவைத்திருக்கும் வீடு தீக்கிறையாக அதில் அந்த பத்திரிக்கை நிருபன் இறந்து விடுகிறான். அதை இந்த விவசாயிதான் இறந்து விட்டதாக மீண்டும் மீடியாக்கள் செய்திகள் பரப்பிவிடுகிறது.

இப்பொழுது அந்த விவசாயின் அண்ணன் அந்தக் குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதோடு மீண்டும் தினம் தினம் பல மையில்கள் நடக்கிறான், இப்பொழுது தனது தம்பி இறந்ததற்கு அரசாங்கத்திடமிருந்து இழப்பீடோ அல்லது உதவித் தொகையோ வேண்டி. இப்பொழுதும் அது கிடைக்கும் என்று தோன்றவில்லை.

கேமெரா இப்பொழுது அந்த கிராமத்தை விட்டு வெளியேறிச் சாலைக்கு வந்து, பிறகு நெடுஞ்சாலையை அடைந்து, பிறகு பட்டணத்துக்குள் நுழைந்து டில்லியின் பிரதான நகருக்கு வருகிறது. வாண் உயர கட்டிடங்கள் ஆங்காங்கு எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகளும் கூலித்தொழிலாளிகள் பலர் அங்கு வேலைசெய்வதும் காட்டப்படுகிறது. அதில் தூசுப் படிந்த முகத்துடன் கேள்விக்குறியுடன் அந்த நாயகன் தானும் ஒரு கூலித்தொழிலாளியாக அமர்ந்திருக்கிறான்.

1.8 மில்லியனோ அல்லது 18 மில்லியனோ (நினைவிலில்லை) விவசாயிகள் எதோ ஒரு வருடத்தில் (வருடமும் எனக்கு மறந்து போச்சு)இந்தியாவில் விவசாயத்தை கைவிட்டிருக்கிறார்கள் என்ற வாக்கியத்துடன் படம் முடிகிறது. படம் முடிந்து வெளிவரும் வரை அந்த சினிமா உங்களை பாதிக்காமல் நகைச்சுவையுடன் முழுவதும் கொண்டு செல்லப்பட்டிருக்கும். ஆனால் தியேட்டரை விட்டு நீங்கள் வெளியில் வரும் போது அது உங்களை கண்டிப்பாகப் பாதிக்காமல் இருக்காது.

இத்தனைக்கும் ஒரு வசனமும் புரியாமல், என்னால் உள்வாங்கிக் கொள்ளப் பட்டதைத்தான் நான் எழுதியிருக்கிறேன். வசனம் புரிந்தால் நிச்சயம் அதன்  பிரமாண்டம் இன்னும் விரியும் என்று ஊகிக்க முடிகிறது. இத்தனைக்கும் நஸ்ருடின் ஷாவைத்தவிர யாருமே சினிமா முகங்கள் அல்ல. அதிலும் அவர்கூட விவசாய அமைச்சராக இரண்டு காட்சிகளில்தான் தலைக்காட்டியிருப்பார். இசையும் கமர்சியல் இல்லாத அசல் கிராமியம்.  (ஒருவேளை பருத்தி வீரன் படம் அமீருக்கு இந்த பீப்லி லைவைத் தயாரிப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கலாம்). ஆனால் இந்தப் படம் இந்திய வரலாற்றில் மிகப் பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது இந்த முறை. அதுவும் ஆச்சரியம்.

ஆஸ்கார் கிடைக்கலாம்.