Monday, March 5, 2012

பிராத்தனை


எந்த தேர்ந்தெடுப்பின் மூலம்
நீ மரணத்தை நிகழ்த்துகிறாய்?
தீயவர்கள் கண்டிப்பாக
மாரடைப்பாலோ புற்றுநோயினாலோ 
இறந்தே தீருவார்கள் 
என்ற நியதி இருந்தால்
நிச்சயமாக உலகம் 
நல்லவர்களால் மட்டுமே 
நிரம்பியிருக்கும் அல்லவா?
ஆனால் நீயோ 
நல்லவர்களையும் கொன்றுவிடுகிறாய்.
அகாலமாய் மரிப்பவர்களின் தகுதிகள் 
என்னவாக இருக்கும்
உன் குறிப்பேட்டில்? 
புகையும் மதுவுமாய் 
அறுபது வயதையும் தாண்டிய நடிகன் 
உயிருடன் இருக்கிறான்
அப்பாவி குழந்தைகளை 
காவு கொள்கிறாய். 
போர்களை விரும்பும் 
தலைவர்களை விட்டுவிடுகிறாய்
ஒரு அன்பான அப்பாவை  
கொன்று விடுகிறாய்.  
எப்படி தீர்மானிக்கிறாய்
ஒருவன் முடிவை? 
ஒவ்வொருவரின் முடிவும்
அந்த உயிருக்கு 
நீ தரும் 
இன்னொரு நல்ல வாழ்க்கைக்கான
தொடக்கம் என 
என்னை நான் 
சமாதானம் செய்துக்கொண்டாலும்
ஒருவேளை நீ
முஸ்லிமாகவோ கிருஸ்துவனாகவோ
அல்லது மதமற்றவனாகவோ இருந்தால்
மரணம் என்னவாக இருக்கும்,
உன் அகராதியில்?
அதுதான் இறுதி,
அதற்கு அப்பால் 
ஒன்றேமே இல்லை 
என்பதுதான்
மரணத்தையும் மிஞ்சிய
துக்கத்தைத் தருகிறது.
காலகாலமாக 
இறந்த எல்லோருக்காவும் 
உன்னை வேண்டுகிறேன்
அவர்களுக்கு இன்னொரு 
பிறவிக்  கொடு.
நிம்மதியான இன்பமான 
வாழ்க்கையை கொடு.
இந்த முறை
அவர்கள் மரண நாளை
அவர்களே தீர்மானிக்கட்டும்,
சந்தோஷமாகவே.
அதுவரை அவர்களுக்கு 
வரங்களை மட்டுமே 
தந்துக் கொண்டு இரு
என்றென்றும்.

Sunday, February 26, 2012

இவனை கொல்வதா?


எந்த அளவுக்கு 
அடிமைப் படுத்தினாலும்
அதைவிட படுபயங்கரமாய் 
வளர்கிறான்.

இன்னமும் என் சிறையில்தான்
இருக்கிறான்
ஆனால் எவ்வளவு நாள் 
இவனை சிறைப்பிடித்திருக்க முடியுமென்று
தெரியவில்லை. 

பூமியின் எல்லையில்
சக்தி வாய்ந்த 
ஆயுதமொன்று இருப்பதாகவும் 
அதைக் கொண்டு
இவனை அழித்துவிடலாம் என்றும்
இறைவன் சொல்லியிருந்தான். 

பூமியின் 
இறுதி எல்லையை நோக்கிய 
நீண்ட பயணத்தை
நானும் தொடங்கினேன்
உடன்  இந்த மந்திர
சிறைக் கூண்டையும்
இதில் இவனையும் 
இழுத்துக் கொண்டே
செல்ல வேண்டியிருந்தது. 
எனது உயிரின் ஒரு பகுதி
இவனிடம் இருந்தது.
இவனை விட்டு என்னால் 
எங்கும் சென்றுவிட முடியாது.
விநோதமான இந்த முடிச்சு
எப்படி எவரால் என்று
எனக்கு சபிக்கப் பட்டது என்பது
தெரியவில்லை
மூலம் தேட அவகாசமில்லை
அழிப்பது ஒன்றே 
விமோசன வழி

அப்படியே விட்டுவிடும் வேளையில்
நரகத்தின் 
மிக பிரமாண்ட சாத்தானையாய்
இவன் உருமாறிவிடுவான்
அன்று 
நான் மட்டுமல்ல 
நான் நேசிக்கும், வெறுக்கும்
வணங்கும் எல்லோருமே
அழிந்துப் போக நேரிடும்
அழிவு மட்டுமே அவனது சுபாவம்.
இப்படிதான் இவனைப் பற்றி 
எனக்கு சொல்லப் பட்டிருந்தது.

ஆனால் இவன் 
இதுவரையில் எனக்கு
என்னைப் பற்றி 
நானும் பிறரும் அறியா
பிரமாண்ட உண்மைகளை மட்டுமே
சொல்லி வருகிறான்
என்னை நானே நேசிக்க
வற்புறுத்துகிறான்
இன்புற்றிருக்க கோருகிறான்
என்னை மதிக்கவும் துதிக்கவும்
போற்றவுமே வேண்டுகிறான்
இறைவனைப் போல அல்ல
இவன் 

இறைவன் எனக்கு 
கற்றுத்தந்தது எல்லாமே
எனக்கு துன்பத்தைத் தவிர
வேறொன்றும் தந்ததில்லை
இறைவனோ 
சுவர்க்க வாசல் 
எனக்காக என்றோ 
திறந்தாகி விட்டது 
என்கிறான்
அவ்வப்போது 
விரும்பிய வெற்றிகளை தந்து
உண்மையின் பாதையில் 
என்னுடன் என்றும் இருப்பதாக
உறுதி கூறுகிறான்

இவனோ 
இறைவனின் கொள்கையை 
நான் நம்பும் வரைதான்
அவனின் இருப்பு.
அவனை அழிக்க
எந்த ஆயுதமும் தேவையில்லை
நான் அவனை மறுக்கும் 
அந்த நொடியே அவன் 
மரித்துப்போவான்
என்கிறான்

சாத்தானின் வேதம்
இது என்று
இறைவன் முன்னமே
எனக்கு சொல்லியிருந்ததால்
நான் இவனை 
இன்னும் நம்பவில்லை

ஆனால் 
இந்த நெடும் பயணத்தில்
எனது வழிதுணை இவன் மட்டுமே
இனிய நினைவுகளும்
கசந்த நினைவுகளுமாக
இவனை தவிர்த்து சொல்லிவிட முடியாதபடி
நீக்கமற நிறைந்துவிட்டிருந்தான் 
என் பயணம் முழுவதிலும்

எனது அனைத்து ரகசியங்களும் 
இவன் அறிவான்
எனது அனைத்து சோகங்களும்
இவன் அறிவான்

இவனை 
விரோதியாக வெறுத்தாலும்
நண்பனாகவும்
நேசிக்கிறேன் 

இவனை அழிக்கத்தான் வேண்டுமா?
இவனை அழிக்கத்தான் வேண்டுமா?

ஒன்று செய்யலாம்… 
எனது உயிரின் மறுபாதியையும் 
இவனில் விட்டுவிடுவது
அல்லது 
இவன் உயிரின் மறுபாதியை
நான் எடுத்துக் கொள்வது

அந்த ஆயுதம் எவருக்கும் 
இனி கிடைக்காத வண்ணம்
வேறு ஒரு கிரகத்தில் 
ஒளித்துவிடலாம் 

Saturday, February 25, 2012

கோமாளி


ஒற்றைச் சக்கரத்தில் 
சாகசம் செய்பவன் நான்
சாகசத்தின் உச்சத்தில் 
கைத்தட்டும் கூட்டம்
விழும் போதும் கைத்தட்டி சிரிக்கிறது
எனது வாழ்க்கை
அவர்களது பொழுதுபோக்கு

என் வலியும் ரணமும் தெரியா வண்ணம்
கோமாளி வேடமிட்டிருக்கிறேன்.  
என் தலைவர் சொல்லியிருக்கிறார்
“உன் கண்ணீரை பார்ப்பதற்கில்லை இந்த கூட்டம்
உன் திறனை மட்டுமே காட்டு”

இரண்டு சக்கரத்தை
நான் பயன்படுத்தும் போது
காணாமல் போகும் 
இந்தக் கூட்டம். 

அவர்களை எல்லாம் 
திரும்ப அழைத்து 
ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்


இரட்டைச் சக்கரத்தை 
மண்ணில் மட்டுமல்ல
விண்ணிலும் ஓட்டுவேன்
என்னைவிடவும் திறமைசாலி 
எவரும் இல்லை இவ்வுலகிலே 


அதை நிரூபிக்க வேண்டிய 
அவசியமும் எனக்கில்லை. 
அவர்களிடம் இருந்து எனக்கு கிடைக்கப்போவது
காற்றோடு தொலைந்துபோகும் 
இன்னுமொரு சப்தம் மட்டுமே
அது எனக்கு 
எந்த ஒரு சந்தோஷமும் உற்சாகமும்
நம்பிக்கையும் நிம்மதியும் 
அளிப்பதில்லையே !

Sunday, February 19, 2012

அத்வைதம்

கவனக்குறைவாகவோ
கைதவறியோ
உடைந்து விட்டது
உன் சிலை

உன் நினைவாக 
என்னிடம் இருந்தது 
அது மட்டுமே
என்றும் இல்லாத அளவு 
நானும் உடைந்திருந்தேன்


முடிந்தவரை 
சிதறிய துகள்களை ஒட்டி
என் ஆழத்தில் புதைந்திருந்த
உன் உருவை 
மீண்டும் 
மீட்டெடுத்தேன்.
மங்கிய நினைவுகளையும்.

கை உடைந்து
மூக்கு பாதியாகி
இன்னும் கணக்கிடாத
பல சேதங்களுடன் 
அடையாளம் இழந்து இப்பொழுது
கலையாக உருமாறியிருந்தாய்.

சிலையாக இருந்த போது
நீ வெறும் நினைவு
அடையாளம் இழந்து இப்பொழுது நீ
எனது சுயம்

நாளை ஒரு நாள்
என் குழந்தைகள்
விளையாட்டாக அதை 
மீண்டும் உடைத்து விடக்கூடும்.
ஒட்ட முடியாத படி
அது முற்றிலும் 
சேதமடைந்துவிடலாம். 

அப்பொழுதும்
ஒரு சின்ன துகளாவது 
எனது பணப்பையிலோ
அல்லது தாயத்திலோ 
உன் நினைவாக என்னில் 
எஞ்சிவிடக் கூடும்

அன்று அதை
நம்பிக்கையும் 
சக்தியும் 
வெற்றியும் தரும் 
மந்திரக்கல்லாக (துகளாக)
நான் கருதக்கூடும்

ஒன்று மட்டும் நிச்சயம்
என் நினைவிலிருந்து
நீ முற்றிலும் மறைந்துப் போகும் 
அந்த ஒரு நாள் -
நான் நீயாகவே
உருமாறியிருப்பேன் 

உன்னை 
நினைத்து கொண்டிருப்பது மட்டும்
காதல் அல்ல 
மறப்பதும்.

Friday, December 16, 2011

பகைமை போற்றுவோம்


பகைமையை போற்றுவோம்
பகைவனை வளர்ப்போம்
தீதும் நன்றே
நன்றே தீதும்

வெற்றியின் இன்பம்
பகைமையில் சிறக்கும்
உழைப்பின் மேன்மை
துரோகியால் ஓங்கும்

என்னில் கொஞ்சமும்
எதிரியில் மிஞ்சியும்
இருக்கும் அசிங்கமே
உண்மையின் பூரணம்
அரக்கனும் கடவுளும்
சேர்ந்ததே புராணம்

அன்பு பலவீனம்
அக்கறை மரணம்
துரோகம் உத்வேகம்
எதிரிதான் வீரியம்

பராசக்தியே!
எதிரிகள் நிறையவே
அனுப்பி வை
துரோகிகள் இன்னும்
அதிகம் செய்
இவர்களை எரித்த
சாம்பலை பூசி
காலனாய் அதிர
சக்தியைக் கொடு
நெற்றியில் இன்னும் ஒரு
கண்ணையும் கொடு

Thursday, December 8, 2011

அடியால் உலகளந்தவன்


என் வழியில் 
நான் விட்டு செல்லும் 
பாத சுவடுகள்
என்னையும் விட
பெரிதாகி வருகிறது

அதே வேளையில்
நான் கொஞ்சம் கொஞ்சமாய்
சிறுத்து வருகிறேன்

முழுவதும் தீர்ந்துப்போகுமுன்
எது எல்லை என்று
தீர்மானித்துவிட நடக்கிறேன்
முன்னமே தீர்மானிப்பதற்காய்
நின்றுவிடுவேனெனில் 
என் சுவடே என்னை 
விழுங்கி விடுமோ
என்ற அச்சம் வேறு

ஒரு சமயம்,
நான் எறும்பினும் சிறிதாகி 
பின்பு இல்லாமலேயே போனேன்
ஆனால் என் சுவடோ
பிரமாண்டமாய் பெருத்து
உலகையே மறைத்திருந்தது
கொஞ்சம் அழித்தும் இருந்தது.

அடியால் உலகளந்தவன்
என்று மட்டுமே
இன்று நான் 
அறியப்படுகிறேன்

Friday, November 4, 2011

யாதும் இசையே யாவரும் கேளீர்

எல்லா இசையையும் நம்மால் ரசிக்க முடியுமா? எனக்கு தெரிந்து கண்டிப்பாக முடியும். எல்லா இசையிலும் ஜீவன் இருக்கிறது. ஆனால் ஏன் நம்மால் சில இசையைச் சுத்தமாக ரசிக்க முடியவில்லை. 

ஏ ஆர் ரஹ்மானின் ROCKSTAR என்ற இந்தி திரைப்பட இசை என்னை பெரிதும் கவர்ந்திருக்கிறது. Sadda Haq என்றப் பாடல் நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் அனுபவிக்கும் இசை. ஆனால் அவரது yahoo group இல் அவருடைய ரசிகர்களே இரு பிரிவுகளாகி, ஒரு பிரிவு அந்த இசையைப் போற்றியும் இன்னொரு பிரிவு அதை மட்டம் தட்டியும் திட்டியும் எழுதுகிறார்கள். அது இப்பொழுது முற்றி பெரிய எழுத்து சண்டையாக வளர்ந்து வருகிறது. அது எனக்கு விநோதமானதாக இருந்தது. ஏன் நம் மனம் ரசனையில் வேறுபடுகிறது? கண்டிப்பாக வேறுப்பட்டுதான் இருக்கும் என்பது நிதர்சனமானாலும் எதனால் வேறுபடுகிறது என்பதை பல சமயம் நாம் ஆழ்ந்து நோக்கியதில்லை. 

வர்ணங்களில் சிலது மட்டுமே நமக்கு பிடிக்கிறது, சிலது கிடையாது. மனோவியல் நிபுணர்கள் சிலர் அது முற்றிலும் நமது மனோவியலோடு தொடர்புடையது என்று காரணம் சொல்கிறார்கள். அதுபோல்தான் இசை ரசனையும் இருக்க முடியும். வேறு சில நிபுணர்கள், அதிகமான நல்ல நினைவுகளும் நல்ல சம்பவங்களும் ஒரு சில வர்ணங்களின் அடிப்படையில் நமக்கு கிடைத்திருக்குமானால் கால போக்கில் அந்த வர்ணம் நமக்கு நேர்மறை எண்ணங்களையும் அந்த வர்ணத்தின் மீது நமது விருப்பத்தையும் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். இதுவும் இசைக்குப் பொருந்தும். 

நான் சபா பல்கலைக்கழகத்தில் படித்த போது எனது பக்கத்து அறையில் ஒரு மலாய் நண்பன் இருந்தான். அவன் எலக்டோரினிக் இன்ஞீனியர் மாணவன். அவன் எப்பொழுதும் Heavy Metal இசையைதான் கேட்பான். அதுவும் அதிக சத்தமாக. ஹெவி மெட்டல் இசையின் முக்கிய அம்சமே அதிக இரைச்சல். இசையை, அதிலும் கிதாரை டியூன் பண்ணி ஒருவகை இரைச்சலாக பண்ணுவது. தமிழில் சரியாக விளக்குகிறேனா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் இதை distortion என்று சொல்லுவார்கள். இளையராஜாவின் இசையில் கலைஞன் படத்தில் வரும் கலைஞன் கட்டுக்காவல் விட்டோடும் காற்றைப்போல் என்றப் பாடல் ஒரு அற்புதமான முதல் தமிழ் ஹெவி மெட்டலாக ஆகியிருக்க வேண்டியது. ஆனால் அப்படியாகவில்லை. அதற்கு முதல் காரணம் எஸ்.பி. பாலா அதை பாடியிருப்பது. இன்னொன்று, இந்த distortion அம்சம் அதில் இல்லாமல் போனது. இளைராஜா அதை ஹெவி மெட்டலாக உருவாக்க விரும்பாமல் இருந்திருக்கலாம். சிங்காரவேலனில் வரும் போட்டு வைத்த காதல் திட்டம் இன்னொரு அற்புதமான ஹெவி மெட்டல் முயற்சி. ஆனால் அசல் ஹெவி மெட்டல் கிடையாது. இந்தியர்களால் நிச்சயமாக ஹெவி மெட்டல் இசையை கொண்டுவர முடியாது, ரசிக்கவும் முடியாது என்றுதான் நினைக்கிறேன். காரணம் காலகாலமாக நாம் நம்பி திரட்டி வந்த கலாச்சாரம் அப்படி. ஆனால் சடா ஹக் என்ற இந்தப்பாடலை ரஹ்மான் செய்திருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. எளிமையான, ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ள ரஹ்மானால் இது முடிந்திருக்கிறது என்பதுதான் என்னை ஆச்சரியப்படவைக்கிறது. இது இந்திய இசையில் இன்னொரு அலையை ஒரு வேளை உண்டாக்கக் கூடும். 

சரி, மீண்டும் அந்த நண்பரிடமே வருவோம். அவன் எனக்கு கொஞ்சம் நெருக்கம் என்பதால் அவனுடைய அறைக்கு அவ்வப்போது செல்வதுண்டு. அப்பொழுதெல்லாம் இந்த இசையை கேட்க நேர்ந்தால் நான் மிகவும் அசெளகரியத்திற்கு ஆளாவேன். அந்த இசை மட்டுமல்ல அவன் அறையும்தான். இருண்ட அறை, மண்டை ஓடுகளின் விதவிதமான ஓவியங்கள் சுவர் முழுவதும் இருக்கும். அவனிடம் ஒரு முறை 'உனக்கு ஏன் இந்த இசை பிடிக்கிறது? என்னால் கேட்க முடியவில்லை' என்று சொன்னேன். அவன் 'இந்த இசையைக் கேட்கும் போது எனது மன அலுத்தம் முற்றிலுமாக வெளியேறிவிடுகிறது' என்றான். எனது மிகபெரிய விரக்தியும் கோபமும் இந்த இசையோடு சேர்ந்து நானும் கத்துவதன் மூலம் வெளியேறிவிடுகிறது என்றான். அதை யோசித்தவாரே 'ஏன் மண்டை ஓடுகளின் படம் உன் அறை முழுவதும்' என்றேன். அதற்கு அவன் 'ஹெவி மெட்டல் இசை கலைஞர்கள் பெறும்பாலும் சாத்தானை வழிபடுபவர்கள், அவர்களுடைய உடை, சீடி கவர் என்று எல்லாவற்றிலும் கொஞ்சமாவது அந்த அம்சம் கண்டிப்பாக இருக்கும்' என்றான். அவர்களுடைய போஸ்டர்களையும் படங்களையும் காட்டினான், இமைகளுக்கு கறுப்பு மையிட்டிருந்தார்கள், தலை முடி அதிகமாகவும் நீளமாகவும் வளர்ந்து, வாராமல் அகோரமாய் இருந்தது. அவன் அவர்களுடைய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல நான் ஒரு பாதாள உலகத்திற்கே சென்றுக்கொண்டிருந்தேன். அதன் உச்சமாக ஒன்று சொன்னான், நான் அதிர்ந்தே போய்விட்டேன். அவன் ஒரு ஹெவி மெட்டல் குழுவின் தீவிர ரசிகன். அந்தக் குழுவின் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை. ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அவர்களும் ஹெவி மெட்டல் இசை உலகின் உச்சத்தில் இருந்தவர்கள். அவன் சொன்னான் அவர்களுடைய மேடை நிகழ்ச்சிகளின் உச்சமாக பன்றிகளை மேடையேற்றி அதனுடன் உறவு கொள்வார்கள். (மன்னிக்கவும் A அல்லது 18 என்ற சென்ஸர் எச்சரிக்கையை போட மறந்ததற்கு.) எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வெளியேறினேன். அதுதான் நான் அவன் அறைக்கு சென்ற கடைசி நாள். இந்த இசையை பற்றி நான் குறிப்பிட்டிருப்பது உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். மனவலிமை உள்ளவர்கள் இந்த இடுக்கைகளை படித்துப் பார்க்கலாம். 

http://en.wikipedia.org/wiki/Heavy_metal_music

http://uncyclopedia.wikia.com/wiki/Metalheads

http://en.wikipedia.org/wiki/Mayhem_(band) 

ஆனால், என்னால் இப்பொழது LINKIN PARK மற்றும் INCUBAS இசைகளையும் அனுபவிக்க முடிகிறது. எனது நம்பிக்கைகளிலும், மனோநிலையிலும், ஒழுக்கத்திலும் எந்த ஒரு மாறுதலும் இல்லாமல் என்னால் அவர்கள் இசையை உள்வாங்க முடிகிறது. அவர்கள் 100% ஹெவி மெட்டல் இசை கலைஞர்கள் இல்லையென்றாலும் அவர்கள் இசையிலும் இந்த distortion அம்சமும், கொச்சை வார்த்தைகளும் அதிகமாக இருக்கும். விரக்தி ஏற்படும் போது இந்த இசை என்னை உச்சாகப்படுத்துவது போல் உணர்வதுண்டு. 

அதனால் எல்லோராலும் எல்லா இசையையும் ரசிக்க முடியும் என்றுதான் நினைக்கிறேன். இருந்தாலும் ஆரம்பத்தில் சொன்னதுபோல் இசை ரசனை முழுக்க முழுக்க நமது மனோவியலின் அடிப்படையில் அமைந்ததுதான். ஒருவேளை ஏ .ஆர். ரஹ்மானின் சில ரசிகர்களுக்கு சடா ஹக் இசை பிடிக்காமல் போனதற்கு காரணம் அதில் இருக்கும் ராக் அம்சமாக இருக்கலாம். இந்தியர்களுக்கு ராக் எப்பொழுதும் கொஞ்சம் அன்னியம்தான். 

இசை வெறும் சப்தங்களை மட்டும் கொண்டு வருவது இல்லை என்பது இதன் வழி தெரிகிறது. அது காலகாலமாக திரட்டி வந்த நம்பிக்கைகளையும் நினைவுகளையும், விளக்க முடியாத, வார்த்தைகள் அற்ற மொழிகளின் வழி நமக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. நமது நம்பிக்கையும் அனுபவங்களும் ஏதோ ஒரு புள்ளியில் அந்த இசையின் சில குறிப்பிட்ட அம்சத்துடன் இணையும் போது, நமக்கு அந்த இசை அற்புதமானதாகவும், கடவுளின் மொழியாகவும் தரிசனம் தருகிறது. அதனால் பல சமயங்களில் ஒரு குறிப்பட்ட இசையைத் தவிர வேறு இசைகளுக்கு நமது மனம் நம்மை மேலும் ஆழமாக செல்லவிடாமல் தடுத்துவிடுகிறது. 

(இளையராஜாவின் இசை இன்னமும் கிராமங்களின் சுவாசமாகவும், இன்னமும் புதிய திரைப்படங்களின் பின்னனி இசையின் சாரமாகவும் இருப்பதற்கு இது முக்கியமான காரணம்.) 

இரண்டாவதாக நிபுணர்கள் குறிப்பிட்டிருப்பது, நமக்கு நேரும் அனுபவம் சார்ந்துதான், ஒன்றின் மீது நமது விருப்பும் வெறுப்பும் அமைகிறது என்று. மனுஷ்ய புத்திரனை ஒவ்வொரு முறையும் நான் சந்திக்கும் போது எங்கள் பேச்சு இசை சார்ந்துப்போகும், அவர் சொல்வார், "இளையராஜாவின் இசையை கேட்கும் போது, நம்முடைய கடந்த காலத்தின் எத்தனை நினைவுகளை அது கூட்டி வருகிறது தெரியுமா? ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு அனுபவம். அவர் இசையைக் கேட்டு ஒரு தலைமுறையே வளர்ந்திருக்கிறது" என்பார். அது உண்மைதான். அந்த தலைமுறை தப்பித்தவரிக்கூட வேறு பாடல்களை கேட்டுவிட முடியாதபடி ஒரு இசை சர்வாதிகாரம் செய்திருக்கிறார், அந்தக் காலகட்டத்தில். அவர் இசையுடன் நமது அன்றாட வாழ்வின் இனிப்பு கசப்புகளை திரட்டி, நமது ஒவ்வொரு பருவத்தையும் கடந்து வந்திருக்கிறோம். ஒருவேளை இப்பொழுதுபோல் அன்றும் பல இசையமைப்பாளர்கள் இருந்திருந்தால், இளையராஜாவின் இந்த இசை அதிசயம் நிகழ்ந்திருக்காமல் போயிருக்கலாம். இன்னும் 10 ஆண்டுகளுக்கும் அல்லது அதற்கும் மேலும் இளையராஜாவின் இந்த இசை மேஜிக் நிலைக்குமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். காரணம் இன்று நமது காதல் தோல்வியில் யுவன் அழுகிறார், நமது வெற்றியை ரஹ்மான் கொண்டாடுகிறார், நமது கொண்டாடத்தில் விஜய் ஆண்டனி ஆடுகிறார். அதனால் அடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடிய இன்றைய தலைமுறை இசை எதுவாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், தமிழ் மண் அதன் வாசனையை இழக்கும் வரை இளையராஜாவின் இசை இருக்கும் என்றுதான் தோன்றுகிறது அல்லது தமிழ் மண் ஒருவேளை அதன் வாசனையை இழக்கும் போது, இளையராஜாவின் இசையால் மீண்டும் தன்னை கண்டடையலாம். 

மற்றொன்று, ஒரு இசையில் நமது விருப்பு வெறுப்பை முடிவு செய்வது frequency (ஒலி அலை). ஒவ்வொரு சுரத்திற்கும் ஒரு அலை உண்டு, ஒவ்வொரு இசைக்கருவிக்கும் சிறந்த ஒரு ஒலி அலை இருக்கும். அதுதான் அந்த இசைக்கருவியின் ஜீவனாக இருக்கும். மிக்ஸிங்கில் (mixing) முக்கிய அம்சமே இந்த ஒலி அலையை மாற்றி எந்த அலையில் ஒரு குறிப்பிட்ட இசை கருவி அல்லது ஓசை அலாதியாக ஒலிக்கிறது என்று கண்டடைந்து அதை இன்னும் மெருகேற்றுவது. மிக்ஸிங்கில் ஒரு பாடலின் மொத்த உணர்வையுமே மாற்றிவிட முடியும். யுவனும் கார்த்திக்கும் பல பேட்டிகளில், அவர்களுடைய இசையில் சில ஒலி அலைகளை (frequency) முற்றிலும் தவிர்த்துவிடும் படி இளையராஜா கூறியதாகச் சொல்லியதுண்டு. (அது எந்த ஒலி அதிர்வு என்பது எனக்கு தெரியாது.) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆடியோ ஒலி அதிர்வு என்பது 20 Hz - 20,000 Hz ஆகும். எல்லா ஒலி பெருக்கிகளும் அல்லது ஹெட் போன்களும் (head phone), இந்த ஒலி அலைகளை, அவர்களின் வெளியீடுகளில் முழுதும் உள்ளடக்குவது இல்லை. சில ஹெட் போன்கள் மிக குறைவான அலையாக 5Hz கொண்டுள்ளது. இது மிகவும் அபூர்வம். சில ஹெட் போன்கள் உயர் அலைகளை 15,000 Hz அளவோடு நிறுத்திகொள்வதும் உண்டு. 

ஒரு இசையை வெவ்வேறு ஒலிப்பெருக்கிகளிலும், சூழலிலும், ஹெட் போன்களிலும் மாற்றி மாற்றி கேட்கும் போது, வெவ்வேறு விதமான அனுபவங்களை நம்மால் உணர முடியும். மிக சிறந்த பாடல்கள் பல சமயங்களில் மலிந்த ஒலிப்பெருக்கிகளில் கேட்கப்பட்டு, நம்மால் உதாசிணப்படுத்தப்பட்டிருக்கும். ஏ ஆர் ரஹ்மானின் எல்லா இசையிலும் இந்த வித்தியாசத்தை நம்மால் துள்ளியமாக உணர முடியும். ஒவ்வொரு ஒலி பெருக்கியும், சாதனமும் (player) ரஹ்மானின் இசையை வெவ்வேறு விதமாக நாம் உணர வகை செய்யும். காரில் கேட்பது ஒரு அனுபவம் என்றால், Hi Fiயில் கேட்பது மற்றொரு அனுபவம். அதையே ஹெட் போனில் கேட்டால் முற்றிலும் வேறு அனுபவம். ஒலி அதிர்வுகளை பற்றி மேலும் தெர்ந்துக்கொள்ள இந்த அகப்பக்கதை பாருங்கள்.http://en.wikipedia.org/wiki/Audio_frequency

இதில் இன்னொரு சுவரசியமான விஷயம் என்னவென்றால் 19Hz கீழான அலைகள் சில சமயம் எதோ ஒரு வெள்ளை உருவத்தை நாம் பார்த்தது போல் ஒரு பிரம்மையை உண்டாக்குவது உண்டு என்று விக் தெண்டி (Vic Tandy) என்ற ஆய்வாளர் கூறியிருக்கிறார். சிலர் பேயையோ ஆவியையோ பார்த்ததாக கூறக் காரணம் இந்த குறைந்த ஒலி அலையினால்தான் என்கிறார். நில அதிர்வுகள், பூமிக்கடியில் இருக்கும் பெட்ரோலியம் மற்றும் இருதய ஆய்வுகள் எல்லாம் 20Hz - 0.001Hz இடைப்பட்ட ஒலி அதிர்வுகளின் வழிதான் ஆராயப்படுகிறது. சில விஞ்ஞானிகள் தூரத்தில் ஒருக்கும் யானைகளுடன் 15hz - 35Hz இடைப்பட்ட ஒலி அலைகளை பயன்படுத்தி தொடர்புக் கொண்டு நிரூபித்திருக்கிறார்கள். இந்த ஒலி அலைகள் நமக்கு பேயை பார்த்த அனுபவத்தையும், மிருகங்களுடன் தொடர்புக்கொள்ளும் வாய்ப்பையும் தருகிறதென்றால், வேறு என்னெவெல்லாம் ஒலியால் சாத்தியம் என்று நினைத்துப்பாருங்கள். சில ராகங்களின் வழி நோயை குணப்படுத்த முடியும் என்பதும், தாவரங்களை வளர்க்க முடியும் என்பதும் சாத்தியம்தான் என்று ஒலி அலைகளை பற்றி படித்துவுடன் நம்ப தொடங்கியிருக்கிறேன். காரணம் ஒவ்வொரு சுரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஒலி அலை இருக்கிறதள்ளவா. திருமந்திரத்தில் கடவுள் நாதமாக இருக்கிறான் என்று சொல்லப்படுவதின் பின்னனியில் பல உண்மைகள் பொதிந்திருக்கிறது என்பதை இப்பொழுதுதான் உணர முடிகிறது. மேலும் தெரிந்த்துக்கொள்ள இந்த இடுக்கையைப் பார்க்கலாம்.http://en.wikipedia.org/wiki/Infrasound 

எல்லா இசையையும் இப்படி கடவுளுடனும், ஆன்மீகத்துடனும் இணைத்து பார்க்க முடியாது. நெகடிவ் உணர்வுகளை தரும் இசையும், ஒலி அலைகளும் நிச்சயம் உண்டு. ஹெவி மெட்டல் இசையின் தீவிர ரசிகர்கள் பெரும்பான்மையோர் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது. மேலே நான் குறிப்பிட்ட இடுக்கையில் அது உள்ளது என்று நினைக்கிறேன். ஜேசுதாஸும் ஒரு பேட்டியில் சில ராகங்களை பாடுவதால் நாம் இறந்துவிட முடியும் என்கிறார். தான் முயற்சித்ததாகவும் ஒரு கட்டத்தில் அந்த அனுபவங்கள் தந்த அச்சத்தால் அதை நிறுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார். 

ஆக, இந்த ஒலி அலைகள் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தையும் உணர்வு மாற்றத்தையும் கொண்டு வர வாய்ப்புள்ளபடியால், ஒரு சில இசை நமக்கு பிடிப்பதற்கும் ஒரு சில இசை நமக்கு பிடிக்காமல் போவதற்கும் இந்த ஒலி அலையும் ஒரு காரணம்தான் என்று நிச்சயமாக கூற முடியும். 

இதை எல்லாம் கடந்து வெவ்வேறு இசையை எப்படி கேட்டும் அனுபவித்தும் பழகுவது? புத்தகம் படிப்பது போல்தான். படிப்பதில் உங்களுக்கு அதிகமான தாகம் இருப்பின் எல்லா வாசிப்புகளும் உங்களுக்கு புது அனுபவமாகவும், கண்டடைதலாகவும் இருக்கும். அதுபோல்தான் இசையும். இசையை கேட்பதில் தாகம் இருக்கவேண்டும் என்பதைவிட அதை அனுபவிக்க உங்களுக்கு தாகம் இருக்க வேண்டும். ஆனால் இதில் சூழலும் சாதனமும் மிகவும் முக்கியமான அம்சம். எனக்கு பழக்கப்பட்டவைகளை மட்டும் இங்கே கூறுகிறேன். 

1. கர்நாடக இசையை ஒலி வட்டுகளில் கேட்பதைவிட கச்சேரிகளில் நேரிடையாக கேட்பது நல்ல அனுபவமாக இருக்கும். 

2. Western Classical இசையை இருண்ட அறையில் headphone இல் கேட்பது அல்லது ஒரு அகலமான அறையில் நல்ல ஒலிப்பெருக்கிகளில் கேட்பது மிகவும் அற்புதமாக இருக்கும். 

3. ராக் இசையை அல்லது பாப் இசையை காரில் பயணிக்கும் போது கேட்பது அல்லது ஹெட் போனில் கேட்பது சிறப்பாக இருக்கும். எனக்கு அதுதான் பிடித்திருக்கிறது. ஹெவி மெட்டல் ராக் இசையை கேட்கும் போது, சாதாரணமாக நாம் கேட்கும் ஒலி அளவைவிட 3 டிபி அல்லது 4 டிபியாக உயர்த்திவிடலாம். (3 db - 4 db) 

4. ஹிப் ஹப் இசையை உங்கள் அறையில் நல்ல Hi Fi சிஸ்டத்தில் கேட்டால்தான், அதுதரும் உச்சாகத்தை உள்வாங்க முடியும். 

5. New Age இசை வகைகளை ஹெட் போனில் கேட்டு அனுபவிப்பது சிறந்தது. 

எல்லா இசை வகைகளுக்கும் உங்கள் மனமும் காதும் பழக்கப்பட்டவுடன், நீங்கள் எதிலும் எந்த இசையையும் கேட்டு மகிழ பழகியிருப்பீர்கள். இசையை ஆழ்ந்து கேட்டு ரசிப்பது என்பது தியானம் போல். 

"இல்லை அகிலன். இசையை கேட்பதால் உங்கள் மூளை மழுங்கிவிடும். இசை நம்மை மிகப்பெரிய முட்டாளாக மட்டுமே ஆக்குமே தவிர அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை" என்று எனது காப்புரிமை வக்கீல் ஆனந்த் வெங்கடாசாரி கூறியது என் நினைவில் வந்து வந்து போவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. ஆக எல்லா இசையையும் கேட்டு பழக விருப்பமுள்ளவர்கள் மட்டும் இந்தக் கட்டுரையைப் படிக்கலாம். சாரி, இந்தவரியை நீங்கள் படிக்கும் போது இந்த கட்டுரையை முழுதுமாக படித்து முடித்திருப்பீர்கள். ஆக நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த கட்டுரையை படித்துவிட்டு எல்லா இசையையும் கேட்டு மகிழ விருப்பம் கொண்டு அதனால் சில அசம்பாவிதங்களை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.